அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திய ஜாங்கிட்டுக்கு பதவி உயர்வா? சென்னை ஹைகோர்ட் இடைக்காலத் தடை
ஏடிஜிபி ஜாங்கிட்டுக்கு பதவி உயர்வு வழங்கச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை: ஏடிஜிபி ஜாங்கிட்டுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஏடிஜிபி ஜாங்கிட்டுக்கு ஜூலை 20ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்தப் பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வித்யா வழக்கு தொடர்ந்தார்.
அவர் கொடுத்திருந்த மனுவில், தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு போஸ் என்பவர் மோசடி செய்தார். அவருக்கு போலீஸ் அதிகாரி ஜாங்கிட் உதவி செய்ததோடு, தன் மீது 6 பொய் வழக்குகளைப் போட்டு அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தினார். எனவே, அவருக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், புகார் மனு குறித்து தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜாங்கிட் பதவி உயர்வுக்கு இடைக்கால தடையும் விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.