மவுலிவாக்கம் கட்டிட விபத்து நடந்த இடம் ஆபத்தான பகுதி என்ற அறிவிப்புக்கு ஹைகோர்ட் தடை
சென்னை: மவுலிவாக்கம் கட்டிட விபத்து நடந்த பகுதியை அபாயகரமான பகுதி என்ற அறிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி என்பவர் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஆகஸ்ட் 26ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் கடந்த ஆண்டு ஜூன் 28ம் தேதி இடிந்து தரைமட்டமானதில் 61 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, இடிந்த கட்டிடத்தின் அருகில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டிடம் உட்பட 50 மீட்டர் சுற்றளவுக்கு ஆபத்தான பகுதி என்றும், அங்கிருப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றத்தில் மனு
இதை எதிர்த்து அருண் எண்டர் பிரைஸ் நிறுவனத்தின் பங்குதாரர் தட்சிணாமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்,மவுலிவாக்கத்தில் கட்டிட விபத்து நடந்த பகுதியில் 50 மீட்டர் சுற்றளவுக்கு ஆபத்தான பகுதி என அறிவித்து, அங்குள்ள வீடு உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆட்சியர் நோட்டீஸ்
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் எங்கள் தொழிற்சாலை உள்ளது. எனவே, தடை உத்தரவை மறுஆய்வு செய்யவும், விலக்கு அளிக்கக் கோரியும் பலமுறை மனு கொடுத்தோம். அதை ஏற்காமல், அந்த இடத்தில் இருந்து வெளியேறுமாறு கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
ஆபத்தான பகுதியல்ல
எங்கள் தொழிற்சாலை மொத்தம் 47 சென்ட் பரப்பில் உள்ளது. இதில் 31 சென்ட் மட்டும் ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் வருகிறது. 16 சென்ட் அந்த பகுதிக்குள் வரவில்லை. ஆட்சியரின் உத்தரவு சட்டப்படி பிறப்பிக்கப்படவில்லை. ஆபத்தான பகுதி என்ற உத்தரவுக்கு காலவரம்பும் இல்லை. எனவே, இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு மனுதாக்கல்
தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘பொதுமக்கள் பாதுகாப்பு கருதியே மவுலிவாக்கம் கட்டிட விபத்து நடந்த இடத்தைச் சுற்றி 50 மீட்டர் சுற்றளவு ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் இடத்தின் மொத்த பரப்பில் 25 சதவீதம் ஆபத்தான பகுதியில் வரவில்லை. அந்த இடத்தை பயன்படுத்திக் கொள்ள மனுதாரருக்கு எந்த தடையும் இல்லை. மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து விசாரித்த கமிஷனும், ‘பிளாக் ஏ' கட்டிடத்தை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. எனவே, மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
இடைக்கால தடை
இந்த வழக்கை நீதிபதி எம்.சத்தியநாராயணன் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான அடிப்படை முகாந்திரம் உள்ளது. எந்த சட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார் என்று தெரியவில்லை. மனுதாரருக்கும் நோட்டீஸ் தரவில்லை. அதனால், ஆகஸ்ட் 26ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
மனுதாரர் பொறுப்பு
ஆகஸ்ட் 26ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதி, விபத்து நடந்த இடத்தில் உள்ள மற்றொரு அடுக்குமாடி கட்டிடம் இடியும் பட்சத்தில் அதற்கான விளைவுகளுக்கு மனுதாரரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.