இரண்டு கொலைகளை செய்தவருக்கு கருணை காட்டமுடியாது… ஆயுளை உறுதி செய்தது ஹைகோர்ட்
சென்னை, மேற்கு அண்ணாநகர் பகுதியில் தங்கமணி என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் போலீஸ் நிதித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. கடந்த 2007-ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி தங்கமணி வெளியில் சென்று விட்டு பகல் 2 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது, தமிழ்ச்செல்வி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இது தெடார்பாக பெயின்டர் ஜெயக்குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
5 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ்
தமிழ்ச்செல்வின் சகோதரர் நடத்தும் கட்டிட கான்ட்ராக்ட் நிறுவனத்திடம் பெயின்டிங் காரான்ட்ராக்ட் எடுத்து வேலை செய்பவர் ஜெயக்குமார். பெயின்டிங் வேலை செய்துகொண்டிருந்த ஜெயக்குமார் கட்டில் செய்து தருவதாக கூறி தமிழ்ச்செல்வியிடம் ரூ.5 ஆயிரத்தை வாங்கியுள்ளார். ஆனால், அந்த பணத்தை திரும்ப தரவில்லை. இந்நிலையில், பணத்தை திரும்ப கொடுக்குமாறு தமிழ்ச்செல்வி கேட்டுள்ளார்.
கொலை செய்த ஜெயக்குமார்
இதையடுத்து, தங்கமணி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து கடந்த 2007 மே 12ம் தேதி தமிழ்ச்செல்வியின் வீட்டுக்குள் நுழைந்த ஜெயக்குமார் தமிழ்ச்செல்வியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.
ஆயுள்தண்டனை
இதையடுத்து ஜெயக்குமாரை கைது செய்த போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு 6வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி கலியமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று 2011 ஜூலையில் தீர்ப்பளித்தார்.
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்த தண்டனையை எதிர்த்து ஜெயக்குமார் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அதில், நேரடியாகப் பார்த்த சாட்சியம் யாரும் இல்லை. மேலும் சாட்சியம் அளித்தவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டவரின் நெருங்கிய உறவினர்கள். எனவே, செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், எம்.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சாட்சியம் அளித்தவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் என்பதற்காக அவர்களது சாட்சியத்தைப் புறக்கணிக்க முடியாது. மேலும், மனுதாரர் ஏற்கெனவே வேறொரு கொலை வழக்கில் ஈடுபட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர். அதன் பிறகு அதை ஆயுள் தண்டனையாகக் குறைத்து இந்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை மனுதாரரின் வழக்கறிஞரால் மறுக்க முடியவில்லை.
ஆயுள் தண்டனை உறுதி
தற்போதும் அதே போன்று ஒரு கொலை வழக்கில் மனுதாரர் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து கொலை செய்யும் நிலையில் கருணை காட்டுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை.
அதனால், செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.