108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் செய்யக்கூடாது - ஹைகோர்ட் உத்தரவு
தீபாவளி போனஸ் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர். இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை: 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளின் கீழ் ஆம்புலன்ஸ் வருவதால் போராட்டம் நடத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவசர உதவி சேவையில் உள்ளனர். இவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போனஸ் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளி போனஸ் வழங்கக் கோரி வரும் 17ம் தேதி வேலை நிறுத்தப் போராட்ட்த்தில் ஈடுபடவுள்ளதாக 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அறிவித்தனர்.
ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், அவசர மருத்துவ உதவி பெருதும் பாதிக்கப்படும் என்றும், எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
போனஸ் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் பணி புரியும் 4 ஆயிரம் பேர் ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.
கோரிக்கையை வலியுறுத்தி தீபாவளிக்கு முதல் நாளான அக்டோபர்17ம் தேதி இரவு 8 மணி முதல், தீபாவளி நாளான அக்டோபர் 18 அன்று இரவு 8 மணி வரை மாநில அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடை பெறும் என்று அறிவித்தனர்.
அப்போதும் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அக்டோபர்18 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்தனர்.
தீபாவளி போனஸ் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜி.வி.கே- ஈ.எம்.ஆர்.ஐ. நிர்வாகத்துடன் ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சேவை நிறுவனம் என்பதால் போனஸ் சட்டத்துக்கு உட்பட்டது இல்லை என்றாலும், ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கக் கூடாது என்பதற்காக 3 ஆண்டுகளாக ஊக்கத் தொகையை வழங்குவது போல, இந்த ஆண்டும் 5,300 ரூபாய் வழங்கப்பட்டாலும், 25 சதவீதம் கேட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஜிவிகே இஎம்ஆர்ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் விதித்திள்ள தடையையும் மீறி, வேலை நிறுத்தம் அறிவித்து இருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பேட்ரிக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, எம்.சுந்தரம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பேட்ரிக், தீபாவளி நேரத்தில் பட்டாசு விபத்துகள் ஏற்படும். அப்போது அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சேவை அத்தியாவசியமானது. இந்த நிலையில், அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் உயிர்பலி ஏற்படும். எனவே அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி ஆம்புலன்ஸ் நிறுவனத்துடனும், ஊழியர்கள் சங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கடந்த ஆண்டு உத்தரவுப்படி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம் என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என தடை விதிக்கிறோம் என்றனர்.
அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்கும் போது ''ஆம்புலன்ஸ் நிறுவனம் தனியார் நிறுவன பங்களிப்பில் நடக்கிறது. கடந்த ஆண்டே நீதிமன்றம் வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்துள்ளது அதை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும், பேச்சு வார்த்தையில் உடன்பாடு வராமல் அவர்கள் போராட்டம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறினார்.