திருப்பதி காணிக்கை சர்ச்சை... எஸ்ஏ சந்திரசேகர் மீது வழக்கு பதியலாம்... ஹைகோர்ட் உத்தரவு!
திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை லஞ்சம் கொடுப்பது என விமர்சித்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
சென்னை : திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை சாமிக்கு லஞ்சம் கொடுப்பதாக விமர்சித்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் சென்னை மாநகர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என விமர்சித்தார். கோவில் உண்டியலில் காணிக்கை போட்டுவிட்டால் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்றால் யாருமே தேர்வு எழுத போகத் தேவையில்லை என்றும் எஸ்ஏ சந்திரசேகர் கூறி இருந்தார்.
இது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இரு மதங்களுக்கிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி இந்து முன்னனி நிர்வாகி வி.ஜி.நாராயணன் என்பவர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
அவரின் புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை ஆணையர் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.