வன்கொடுமைக்கு பலியான ஹாசினி.. போலீசின் அலட்சியத்தால் குற்றவாளி மீதான குண்டாஸ் ரத்து!
சென்னை, போரூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி குறித்து போலீசார் முறையான தகவல் அளிக்காததால் அவன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை : போரூர் அருகே வன்கொடுமை செய்து இளைஞரால் எரிக்கப்பட்ட 7 வயது சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்மள்ளது. போலீசார் முறையான பதில் அளிக்காததால் தண்டனை ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
போரூரை அடுத்த மாங்காடு மதனந்தபுரத்தில் உள்ள நிகிதா அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பாபு. சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவரது குட்டி தேவதையான 7 வயது மகள் ஹாசினி இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் வீட்டுக்கு வெளியே தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சிசிடிவி காமிரா காட்சிகளின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 22 வயது இளைஞர் தஸ்வந்த் என்பவர் பிடிபட்டார்.
வன்கொடுமை செய்து கொலை
குழந்தை ஹாசினிக்கு தஸ்வந்த் பாலியல் தொல்லை கொடுத்த போது அவர் கத்தியதால் தலையணையால் அழுத்திக் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்தார். மேலும் தன் மீது சந்தேகம் வராமல் இருக்க தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் அனகாபுத்தூர் பாலத்தையொட்டி 100 மீட்டர் தூரத்தில் பையில் மறைத்து எடுத்துச் சென்று ஹாசினியின் உடலை எரித்துவிட்டதாகவும் கூறினார்.
குற்றவாளி சிறையில்
அனைவர் மனதிலும் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது இந்த சம்பவம். இதனையடுத்து தஸ்வந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
குண்டர் சட்டம்
சுமார் ஒரு மாத காலத்திற்கு பிறகு தஸ்வந்த் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய மகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தஷ்வந்தின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
போலீஸ் அலட்சியத்தால் ரத்து
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, போலீசார் தஷ்வந்த் மீதான குற்றத்தை நிரூபிக்கும் வகையில் முழுமையான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. இதனால் போலீசார் முழுமையாக பதிலளிக்காத நிலையில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.