சென்னை பல்கலையில் இருந்து வெளியேறு.. பாஜக எம்பி தருண்விஜய்க்கு மாணவர்கள் எதிர்ப்பு.. 20 பேர் கைது
சென்னை பல்கலைகழகத்திற்கு வந்த பாஜக எம்பி தருண்விஜய்க்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறு என்று பாஜக எம்பி தருண்விஜய்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் நிர்வாகவியல் துறை சார்பாக கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக எம்பி தருண்விஜய் அழைக்கப்பட்டிருந்தார். அதனை ஏற்று நிகழ்ச்சிக்கு வருவதாக எம்பி தருண் விஜய் ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்த தகவலை தெரிந்து கொண்ட மாணவர்கள், ஆர்.எஸ்.எஸ்சின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த தருண்விஜய் சென்னை பல்கலைக்கழக்திற்கு வரக் கூடாது என்று நோட்டீஸ் அடித்து மாணவர்களிடையே விநியோகம் செய்தனர். இதனால் சென்னை பல்கலைக்கழகத்தில் காலையில் இருந்து பதற்ற நிலை காணப்பட்டது.
இதனையடுத்து அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக காவல்துறை துணை ஆணையர் பெருமாள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்ட எம்பி தருண் விஜய் 2 மணியளவில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தார். அப்போது தயார் நிலையில் இருந்த 20 மாணவர்கள் "வெளியேறு.. வெளியேறு.. பல்கலைக்கழக்தில் இருந்து வெளியேறு" என்று முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தடுத்து நிறுத்திய போலீசார் 20 மாணவர்களை கைது செய்துள்ளது.
பாஜக எம்பியான இவர், வடமாநிலத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவப் போகிறேன் என்று தமிழகத்தில் இருந்து வள்ளுவர் சிலையை உத்தரபிரதேசத்திற்கு கொண்டு சென்று ஒரு பூங்காவின் ஓரமாக அதனை போட்ட பெருமை மிக்கவர்தான் இந்த தருண்விஜய்.