பேரிடர் மேலாண்மை பற்றி பேசச் சொன்ன மாணவர் மீது தாக்குதல்: சென்னை பல்கலை மாணவர்கள் போராட்டம்- கைது
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை குறித்த கருத்தரங்கில் அரசுக்கு எதிராக கேள்வியெழுப்பிய பல்கலைக்கழக மாணவரை, பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்கள் தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கு, மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் உருவானது.
சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று பேரிடர் மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாநில தேர்தல் ஆணைய செயலர், ஜோதி நிர்மலா சாமி அரசு மேற்கொண்ட நிவாரணப் பணிகள் குறித்து விரிவாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது பார்வையாளர் பகுதியிலிருந்து ஒரு மாணவர் கைதட்டியபடி எழுந்தார். 2 வாரங்கள் சென்னை என்ன நிலையிலிருந்தது என்பதை அனைவரும் அறிவோம். இது அரசு சாதனைகளை விளம்பரப்படுத்தும் கூட்டம் அல்ல. பேரிடர் மேலாண்மை குறித்து பேசுங்கள் என்றார்.
அந்த மாணவரை பல்கலைக்கழக பணியாளர்கள், பேராசிரியர்கள் சூழ்ந்து கொண்டனர். ஜோதி நிர்மலா சாமி தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். மறுபடியும் அந்த மாணவர், கருத்தரங்கில் பயனுள்ள கருத்தை கூறுங்கள் என குரல் எழுப்பினார். உடனே பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் அந்த இளைஞரை தர தரவென இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர்.
இதில் மாணவரின் முகம், கழுத்து, கைகளில் அடி விழுந்தது. அந்த மாணவர் தன்னை காப்பாற்றச் சொல்லி அபயக் குரல் எழுப்பினார். அவரை பல்கலைக்கழக ஊழியர்கள், முதல் தளத்தில் உள்ள துறை நூலகத்தில் அடைத்து வைத்தனர்.
தாக்குதலுக்கு ஆளான மாணவரின் பெயர் ஜோனஸ் ஆண்டன் என்பதாகும். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் எனவும் தற்போது பிரான்ஸில் குடியுரிமை பெற்று இந்தியா வந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்த முதுகலை பாடப்பிரிவு 2ம் ஆண்டு படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மாணவர் தாக்கப்பட்ட செய்தி மற்ற மாணவர்களிடையே பரவியதை அடுத்து ஏராளமானோர் குவிந்தனர். துணைவேந்தர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் மெரினா கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபடுவோம் எனக் கூறி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் திரண்டனர்.
அப்போது தலைமைச் செயலகத்தில் முதல்வர் இருந்தார். அவர் வீடு திரும்பும் நேரத்தில் பிரச்சினையாகிவிடக் கூடாதே என்பதால் பல்கலைக்கழக வளாக வாயில்கள் மூடப்பட்டன. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால், மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், துணைவேந்தர் அலுவலகத்தில் போலீஸார் மற்றும் மாணவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. துணைவேந்தர் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததால் மாணவர்கள் கலைந்து சென்றனர். எனினும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என எச்சரித்துள்ளதால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் கைது
இதனிடையே இன்று காலையில் பல்கலைக்கழகத்திற்கு வந்த மாணவர்களின் ஒருசாரார், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவரை தாக்கிய தேர்வுத்துறைக் கட்டுப்பாட்டாளர் திருமகன், பேராசிரியர் மதுரை வீரன் இணை பேராசிரியர் வெங்கடேசன் மற்றும் சில பல்கலைக்கழக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முழக்கமிட்டனர். இதனையடுத்து அங்கிருந்த போலீசார், மாணவர்களை கலைந்து போக வலியுறுத்தினர் இதில் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மாணவர்களை கைது செய்த போலீசார் சிந்தாதரிப்பேட்டை சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர். மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.