கோட்டை கொடிமரத்துக்குக் கும்பிடு போட்டு பிரசாரம்.. இது குடிகாரர்கள் சங்கம்!
சென்னை: தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கமும் சட்டசபைத் தேர்தலில் களம் குதிக்கிறதாம். வருகிற 26ம் தேதி தனது பிரசாரத்தை தொடங்குகிறதாம்.
இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் பி. செல்லப்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் 2016 சட்டசபைத் தேர்தலில் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக சட்டசபையில் குரல் கொடுத்திட வேட்பாளர்களை நிறுத்துகிறது.
26ம் தேதி அன்று கோட்ட கொடிமரத்தை நோக்கி வணங்கி பிரசாரம் தொடங்குகிறது என்று கூறியுள்ளார்.
மது குடிப்போர் சங்கத்திற்குத் தேர்தல் புதிதில்லை. ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இக்கட்சி சார்பில் குமாரசாமி என்ற பெயரில் ஒரு வேட்பாளரை நிறுத்தி கலகலக்க வைத்தது இந்த சங்கம் என்பது நினைவிருக்கலாம்.
இப்போது சட்டசபை பொதுத் தேர்தலையும் கலக்கக் கிளம்பியுள்ளது மது குடிப்போர் சங்கம்.
சியர்ஸ்!