மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் கருகிய ஆயிரங்கால் மண்டபம் - செத்து மடிந்த புறாக்கள்
மீனாட்சி அம்மன் கோவிலில் தீயின் வெப்பம் தாங்காமல் மாடங்களில் இருந்த புறாக்கள் மடிந்து விழுந்தன.
Recommended Video
சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோவில் மாடத்தில் இருந்த நூற்றுக்கணக்கான புறாக்கள் செத்து மடிந்துள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுர வாசலில் ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் இருபுறங்களிலும் வளையல்கள், அலங்கார பொம்மைகள், விபூதி-குங்குமம் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.
நேற்று இரவு கோவில் நடை முழுவதும் சாத்தப்பட்டு கோவில் ஊழியர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர்.
அப்போது திடீரென தீ பற்றி எரிந்தது.
ஆயிரம் கால் மண்டபம்
மீனாட்சி அம்மன் கோவிலில் 4 கோபுர வாசல்கள் உள்ளன. இதில் தெற்கு, கிழக்கு கோபுர வாசல் பக்கம்தான் பக்தர்கள் அதிகம் பேர் வருவார்கள். கிழக்கு கோபுர வாசல் பகுதியில் கடைகள் அதிகம் உள்ளன. கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆயிரம் கால் மண்டபம் இந்த பகுதியில்தான் உள்ளது.
பயங்கர தீ விபத்து
தீப்பிடித்த கடைகளில் துணிகளால் ஆன கலைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததால் துணிகளில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அடுத்தடுத்த கடைகளில் தீ வேகமாக பரவியது. இதனால் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் கருகி சாம்பலாயின. இதில் மண்டபத்தின் மேற்கூரையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது.
உயிரிழந்த புறாக்கள்
தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை. எனினும் கோவில் கோபுரத்தில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான புறாக்கள் செத்து மடிந்தன.
நள்ளிரவில் தீ எரிந்த இடத்தை பார்க்க அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோயிலில் தீத்தடுப்பு சாதனங்கள் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிர்வாகத்தினர் ஆலோசனை
தீ விபத்து பகலில் நடந்திருந்தால் பக்தர்களும், கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் அக்னியில் கருகியிருப்பார்கள். இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பக்தர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. வெப்பம், புகையில் சிக்கி கோவில் மாடத்தில் தஞ்சமடைந்திருந்த புறாக்கள் உயிரிழந்து விட்டன.
இந்த தீ விபத்து ஏதேனும் யாகம் செய்ய வேண்டுமா என்று கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.
ஆயிரம் கால் மண்டபம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனம் செய்யலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் தெரிவித்துள்ளார். மேலும் கிழக்கு கோபுர வாசல் மட்டும் ஆய்வுக்கு பிறகு திறந்துவிடப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். இன்று காலையிலும் ஆய்வு நடத்திய ஆட்சியர் தீ விபத்து ஏற்பட்டது பற்றி விசாரணை நடத்தினார்.