அம்மா பிரதமராக மோடியும், ராகுலும் வழிவிட வேண்டும்: மதுரை ஆதீனம்
சென்னை: ஜெயலலிதா பிரதமர் ஆக மோடியும், ராகுலும் வழிவிட வேண்டும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள ஏழைகள் நலம்பெற அம்மா பிரதமர் ஆகியே தீர வேண்டும் என்றார்.
மதுரை ஆதீனம் குருமகா சந்நிதானம் பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். பேட்டியை துவங்கும் முன்பே நித்தியானந்தா பற்றி கேட்கக் கூடாது என்று கறாராக தெரிவித்துவிட்டார்.
அந்த பேட்டியின் விவரம்.
மடாதிபதியாக இருப்பினும், சைவ மத பிரதிநிதியாக இருப்பினும் எனக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது. கருத்துரிமை உள்ளது. அதனால் நாம் கிளம்பியுள்ளோம். தமிழக முதல்வர், தங்கத் தாரகை, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அவரது ஆட்சியில் தமிழகம் அனைத்து வகையிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அப்படிப்பட்ட கட்சிக்காக பிரச்சாரம் செய்வதில், ஆதரவு அளிப்பதில் தவறு இல்லை. அதை தான் ஆதீனமும் செய்கிறோம்.
புரட்சி தலைவி இந்திய பிரதமர் ஆவார் என்று நான் 13 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்தேன். அதற்கான இறையமைப்பு அவருக்கு தான் உள்ளது. தமிழகத்தில் மட்டுமே அம்மா விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்கிறார். தமிழகத்தில் மட்டுமே அப்பாவி ஏழைகளுக்கு அனைத்தும் கிடைக்கிறது. இது இந்தியா முழுவதும் உள்ள ஏழைகளுக்கும் கிடைக்க அம்மா பிரதமர் ஆகியேத் திர வேண்டும். அதற்கு மோடியும், ராகுலும் வழிவிட்டால் நன்றாக இருக்கும் என்பதை அவர்களிடம் அன்புடன் ஆதீனம் கேட்டுக் கொள்கிறது.
புரட்சித் தலைவியை நாம் சந்தித்தபோது அம்மா நாலு அடி முன்னோக்கி எடுத்து வைத்து வந்து எம்மை வரவேற்றார். நலம் விசாரித்தார். மேலும் எம்மை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார். 13 ஆண்டுகளுக்கு முன்பே அம்மா பிரதமர் ஆவார் என்பதை நாம் கூறினோம் என்பதை அவருக்கு நினைவுபடுத்தினோம். தேர்தலில் எம்மை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அம்மா அமைச்சர் ஓ.பி. எஸ்ஸிடம் தெரிவித்தார். அவர் அதை பணிவுடன் ஏற்றார். அதன் பிறகு இருக்கையில் இருந்து எழுந்து நின்று எம்மை வழியனுப்பி வைத்தார். இந்த பண்பாடு அம்மாவுக்கு மட்டுமே உரித்தானது.
பிரச்சார அட்டவணை அம்மாவின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது எம் கைகளுக்கு வந்ததும் அம்மாவை பிரதமராக்கியே தீர்வது என்ற குறிக்கோளுடன் பிரச்சாரம் செய்வோம் என்று கூறியுள்ளார் ஆதீனம்.