அதிமுகவிற்கு ஆதரவாக மதுரை ஆதினம் தேர்தல் பிரசாரம் !
சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
கடந்த 5 ஆண்டு காலமாக அதிமுக அரசுக்கு ஆதரவாக பேசி வந்தார் மதுரை ஆதீனம். லோக்சபா தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்து வந்தார் அதிமுகவினரை விட அதிகம் அம்மா புராணம் பாடியது ஆதினம்தான் என்றால் மிகையாகாது.
கடந்த சில மாதங்களாக அமைதி காத்து வந்த ஆதினம், அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு அழைத்தும் செல்லவில்லையாம். இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மதுரை ஆதீனம். அப்போது அவர் கூறியதாவது, மதுரை ஆதீனம் திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட பழமையான ஆதீனம்.
எல்லோரும் ஆண்டவனுடைய குழந்தைகள் என்ற அடிப்படையில் எந்த ஜாதியினராக இருந்தாலும், அனைவருமே இறைவனின் அருளால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையே மதுரை ஆதீனம் மூலமாக மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறோம் என்றார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினேன். அப்போது அரசியல் நிலவரம் குறித்து எதுவும் பேசப்படவில்லை. சன்னிதானத்தின் ஆசிர்வாதம் தனக்கு எப்போதும் வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சன்னிதானத்தின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும் அம்மா என்று ஆசிர்வதித்தேன் என்று பதிலளித்தார்.
அதிமுகவுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப் போவதாகக் கூறப்படுகிறதே அதுபற்றி? பிரசாரம் செய்வோம். தேதி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறினார் மதுரை ஆதீனம்.
பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மதமாற்றம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, அது அவரவர் மனநிலையில் இருக்க வேண்டும் பணத்திற்காவோ, வேலை வாய்ப்புக்காகவோ யாரும் மதம் மாறக் கூடாது என்பது எங்கள் கொள்கையாக இருக்கிறது என்றார்.