மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக மக்களுக்கு வரம்: பன்வாரிலால் புரோகித்
Recommended Video
சென்னை: மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக மக்களுக்கு ஒரு வரமாக இருக்கும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள ராஜ் பவன் தர்பார் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் அவர் பேசியதாவது,
மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முக்கிய மாநிலமாக உள்ளது. சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு கண் மருத்துவமனை ஆகியவை ஆசியாவிலேயே பழமையான மருத்துவமனைகளில் அடக்கம்.
குழந்தை மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் வெகுவாக குறைந்து தமிழகம் சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மருத்துவமனைகள் அமைப்பதில் தனியார் துறைகளின் பங்களிப்பு 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.
குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து அளிப்பதில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ளனர் என்ற பெருமை இந்த மாநிலத்திற்கு உள்ளது.
பொது சுகாதார சட்டத்தை கொண்டு வந்த முதல் மாநிலம் தமிழகம். உலகின் கிழக்கு பகுதியின் மருத்துவ சுற்றுலா மையமாக தமிழகம் விளங்குவதில் ஆச்சரியம் இல்லை.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது தமிழக மக்களுக்கு ஒரு வரமாகும். இந்த மருத்துவமனை மூலம் தமிழகத்தின் தென் பகுதியில் இருக்கும் 15 மாவட்ட மக்கள் பயன் பெறுவார்கள் என்றார்.