கனமழை எதிரொலி.. மதுரை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து நாசம்
தென் தமிழகத்தில் தொடர் மழை காரணமாக விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
மதுரை: தென் தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மதுரை விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
தென் தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மதுரை விமான நிலையத்தின் உட்பகுதியில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக விமான நிலையத்தில் நீர் வெளியேற்றும் குழாய்கள் பழுதடைந்துள்ளதால் நீர் வெளியேறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது. இதனால் நீர் தேங்கி சுற்றுச்சுவர் ஊறும் நிலை ஏற்பட்டது.
இதனால் மதுரை தூத்துக்குடி முக்கிய சாலையில் 50 அடி தூரத்திற்கு மதுரை விமான நிலையத்திற்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று மதுரை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், புதிதாக சுற்றுச்சுவர் கட்ட உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய இயக்குநர் ராவ் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் யாரும் விமான நிலையத்தின் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகத் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.