போலீஸ் கட்டுப்பாட்டில் அலங்காநல்லூர்... மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை
அலங்காநல்லூர் முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தியவர்களை தடியடி நடத்திய வெளியேற்றிய காவல்துறையினர் அலங்காநல்லூர் பகுதி முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது இன்று காலை தடியடி நடத்திய போலீசார் அவர்களின் போராட்டத்தை வலுக்கட்டாயமாக முடித்து வைத்தனர்.
இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஊர்த் தலைவர்கள் விழா கமிட்டியினர் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர் நிரந்தர சட்டத்துக்கான அறிவிப்பு வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர்.
போலீசார் 30 நிமிடம் கெடு விதித்தும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இதனால் மக்கள் நாலாபுறமும் சிதறியோடினர். இதையடுத்து அலங்காநல்லூர் முழுவதும் அணிவகுப்பு நடத்தி அப்பகுதி முழுவதையும் போலீசார் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
தெருமுனைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேவர வேண்டாம் என்றும் போலீசார் எச்சரித்துள்ளார். மேலும் மற்றப்பகுதிகளில் இருந்தும் போலீசார் அலங்காநல்லூர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.