தமிழக டிஜிபி பதவி நீட்டிப்புக்கான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு...உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரன் பதவி நீட்டிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது சென்னை உயநீதிமன்ற மதுரை கிளை.
தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் பதவி நீட்டிப்புக்கு எதிராக கதிரேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து தீர்ப்பு வழங்கும் தேதியை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சட்டம் ஒழுங்கு கூடுதல் பொறுப்பு டிஜிபியாக பதவி வகிக்கும் டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 30 ம் தேதியோடு நிறைவுற்றது. அதனையடுத்து, அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு மேலும் 2 ஆண்டுகள் டிஜிபியாக பணி நீட்டிப்பு வழங்கியது தமிழக அரசு.
இது பல்வேறு தரப்பிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, டிஜிபி பதவி உயர்வை எதிர்த்து , சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கதிரேசன் என்பவர் வழக்குத் தொடர்ந்து இருந்தார்.
இது குறித்து மனுதாரரின் வழக்கறிஞர் கண்ணன் கூறுகையில், 'வருமானவரித்துறையினர் சோதனையின்போது சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், மாநில அமைச்சர்கள், மூத்த காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுத்துள்ளது தெரிய வந்தது.
இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச்செயலர் மற்றும் உள்துறைச்செயலருக்கு வருமான வரித்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அதை கிடப்பில் போட்டு விட்டனர். அதில் டிஜிபி ராஜேந்திரன் தொடர்பு குறித்த ஆதாரங்கள் உள்ளன.
எனவே ராஜேந்திரன் பணியில் தொடர்ந்தால் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை பாதிக்கும்." என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை இன்று, தீர்ப்புத் தேதியை ஒத்திவைத்துள்ளதால் தமிழக காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.