ரூ.2000 நோட்டு செல்லாது என அறிவிக்கக்கோரிய மனுவை தள்ளபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை
தேவநகரி எண் அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மதுரை: புதிய 2000 ரூபாய் நோட்டில் தேவநகரி எண் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அவை செல்லாது என அறிவிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த நவம்பர் 8அம் தேதி முதல் பழைய 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசு புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. புதிய 2000 ரூபாய் நோட்டில் தேவநகரி எண் அச்சிடப்பட்டுள்ளதால் அதனை செல்லாது என அறிவிக்கக்கோரி மதுரையை சேர்ந்த கேபிடி.கணேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி பொதுமக்கள் பயன்படுத்தும் 2000 ரூபாய் நோட்டில் தேவநகரி எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த 2000 ரூபாய் நோட்டில் சர்வதேச அளவில் பயன்பாட்டில் உள்ள எண்களின் வடிவங்களுக்கு பதில், தேவநாகரி வடிவத்தில் எண்களை குறிப்பிட்டு உள்ளனர்.
ஹிந்தி மொழியில், எண்களுக்கு தேவநாகரி எழுத்துக்களை பயன்படுத்துகின்றனர். மத்திய ஆட்சி மொழியாக இந்தி இருந்தாலும், எண்களை பொறுத்தவரை சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவங்களை தான் பயன்படுத்த வேண்டும் என்பது சட்டம். எனவே புதிய 2000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிபிடப்பட்டிருந்தது.
அந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.