மதுரை நாட்டு வெடிகுண்டு கேஸ்.. "டுபாக்கூர்" நாடகமாமே...??
மதுரை: மதுரை அண்ணாநகரில், குப்பைத் தொட்டியில் வெடிகுண்டு சிக்கிய விவகாரத்தில் ஏகப்பட்ட உள்குத்துக்கள் இருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.
அதாவது சகாயம் மேட்டரை அமுக்க, வரிச்சியூர் செல்வத்தை பகடைக் காயாக வைத்துக் கொண்டு காவல்துறையினர் போட்ட டிராமாதான் இது என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்திலேயே சிலர்.
உண்மையில் வெடிகுண்டு, கொலை சதி, திட்டம் என்று எதுவும் இல்லையாம். வைத்தது போல வைத்து எடுப்பது போல எடுத்து, விசாரிப்பது போல விசாரித்து ஒரு சின்ன நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் மதுரை போலீஸார் என்கிறார்கள்.
அண்ணாநகரில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் சமீபத்தில் 11 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று அதைக் கைப்பற்றினர். பின்னர் விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையில் இந்த குண்டுகளை மதுரையைச் சேர்ந்த அப்பள ராஜா என்ற ரவுடி, வரிச்சியூர் செல்வத்திற்காக தயாரித்துக் கொடுத்தார் என்றும், மதுரையைச் சேர்ந்த பெருசு அழகர் என்ற ரவுடியை போட்டுத் தள்ள செல்வம் இந்த வெடிகுண்டுகளைக் கேட்டதாகவும், மொத்தம் 25 குண்டுகளைத் தயாரித்துக் கொடுத்தார் ராஜா என்றும், அதை கீரி மணி என்பவர் கொண்டு வந்து கொடுத்தார் என்றும் தகவல்கள் வெளியாகின.
அப்பள ராஜா தற்போது சென்னை சிறையில் உள்ளார். இந்த சம்பவத்திற்குப் பின்னர் வரிச்சியூர் செல்வம், அவரது டிரைவர், கீரிமணி உள்ளிட்டோர் தலைமறைவாகினர். மேலும் சிலரும் தலைமறைவாகினர். ஆனால் அடுத்தடுத்து இவர்கள் கோர்ட்டுகளில் சரணடைந்தனர். தற்போது பாதுகாப்பாக சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில் காவல்துறை வட்டாரத்திலேயே சிலர் இதை ஒரு நாடகம் என்று கூறி வருகின்றனர். இதனால் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சகாயம் விவகாரம் சூடாக காணப்பட்டதால் அதை அமைதிப்படுத்த, மட்டுப்படுத்த, வரிச்சியூர் செல்வம் உதவியுடன் இந்த நாடகத்தை போலீஸ் அதிகாரிகள் சிலர் அரங்கேற்றியதாக கூறப்படுகிறது.
வரிச்சியூர் செல்வம் எந்தத் திட்டமும் போடவில்லை என்றும் கூறுகிறார்கள் அவரது தரப்பினர். எனவே இந்த நாடகத்தை சகாயம் மேட்டரை அமுக்க போலீஸாரில் சிலர் நடத்திய நாடகம் என்று தகவல்கள் கூறுகின்றன.
உண்மை என்னவென்று தெரியவில்லை. சகாயம் மேட்டரை அமுக்க மேலும் மேலும் பல பரபரப்புகளை மதுரை காண வேண்டி வருமோ என்ற அச்சமும் மக்கள் மனதில் கிளம்பியுள்ளது என்னவோ உண்மை.