மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றம்: 19ல் திருக்கல்யாணம், 22 கள்ளழகர் எழுந்தருளல்
மதுரை: பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 19ம் தேதியும் தேரோட்டம் 20ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 22ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருகிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் முக்கிய விழாவான சித்திரை திருவிழா ஞாயிறன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் தர்ப்பை புல் கட்டி வெண்பட்டினால் சுற்றி பிரம்மாண்டமான மாலை சூட்டப்பட்டு, கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதனையடுத்து, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், பிரியாவிடை ஆகிய சுவாமிகள் அங்கு எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து சுவாமி, அம்மன் வெள்ளிச் சிம்மாசனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். இரவில் நான்கு மாசி வீதிகளிலும் சுவாமி, பிரியாவிடையுடன் கற்பக விருட்சத்திலும், அம்மன் வெள்ளிச் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தார்.
அம்மன் வீதி உலா
திங்கள்கிழமை காலை கோயிலுக்குள் முத்துராமய்யர் மண்டகப்படியில் சுவாமி, அம்மன் எழுந்தருள்வர். செவ்வாய்க்கிழமை காலை கல்யாணசுந்தர முதலியார் மண்டகப்படியிலும், வருகிற 13ஆம் தேதி வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியிலும் சுவாமி, அம்மன் எழுந்தருள்வர்.
பட்டாபிஷேகம்
விழாவின் 8-ஆம் நாளான 17ம் தேதி ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் எழுந்தருளும் நிலையில், அன்று மாலை மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் நடைபெறும். 18ம் தேதி கீழமாசி-வடக்குமாசி வீதி சந்திப்பில் திக்கு விஜயம் நடைபெறும்.
திருக்கல்யாணம்
19-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும். இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தருவார்கள்.
கள்ளழகர் எழுந்தருளல்
20ம் தேதி தேரோட்டமும், அன்று மாலை தடம் பார்த்தலும் நடைபெறும். 21ம் தேதி தீர்த்தவாரியும், 22ம் தேதி அழகர் மலையில் இருந்து வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் முக்கிய நிகழ்வு நடைபெறுகிறது.
அழகர் புறப்பாடு
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகர்மலையிலிருந்து கள்ளழகர் வரும் 20ம் தேதி மாலை மதுரை நோக்கி புறப்படுகிறார்.
அழகர்மலையிலிருந்து மதுரை வரும் வழியில் 400 க்கும் மேற்பட்ட திருக்கண் மண்டபங்களில் அருள்பாலிப்பார்.
எதிர்சேவை
மூன்றுமாவடியிலும், மாலையில் மாநகராட்சி அண்ணா மாளிகைப் பகுதியிலும் கள்ளழகருக்கு எதிர்சேவை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு விடிய விடிய தல்லாகுளம் பெருமாள் திருக்கோயிலைச் சுற்றிலும் பக்தர்கள் அழகரை வரவேற்பர்.
வைகை ஆற்றில் அழகர்
வெள்ளிக்கிழமை ஏப்ரல் 22ம் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கள்ளழகர் ஆற்றில் இறங்கி அருள்பாலிக்கிறார். இதையடுத்து 23ம்தேதி காலை தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தும், இரவில் தசாவதாரக் கோலத்திலும் கள்ளழகர் அருள்பாலிப்பார்.
பூப்பல்லக்கில் விடைபெறுதல்
24ம் தேதி கள்ளழகர் இரவில் தல்லாகுளம் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு பூப்பல்லக்கில் எழுந்தருளும் அவர் 25 ஆம் தேதியான திங்கள்கிழமை காலை அழகர்மலைக்கு புறப்பாடாகிறார். செவ்வாய்க்கிழமை வழிநடையில் அருள்பாலிக்கும் கள்ளழகர் 27 ஆம் தேதி புதன்கிழமை இருப்பிடம் சேருகிறார்.