மதுரை சித்திரை திருவிழா: ஏப் 27ல் மீனாட்சி திருக்கல்யாணம்,30 ல் அழகர் வைகையில் இறங்குகிறார்
உலக பிரசித்தி பெற்ற மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Recommended Video
மதுரை: உலக பிரசித்தி பெற்ற மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 27ஆம் தேதி திருக்கல்யாணமும், ஏப்ரல் 30ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறவுள்ளது.
ஆண்டு தோறும் சித்திரை மாதம் பவுர்ணமியை முன்னிட்டு மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 25ஆம் தேதி இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 26ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக்விஜயமும் நடைபெற உள்ளது.
மீனாட்சியை கரம்பிடிக்கும் சொக்கநாதர்
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் 27ஆம்தேதி நடைபெறுகிறது. இத்திருக்கல்யாணம் முடிந்த உடன் மீனாட்சி, பிரியாவிடை சமேதராக சுந்தரேஸ்வரர் காட்சியளிப்பதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண் குளிர கண்டு ரசிப்பார்கள்
சித்திரை தேரோட்டம்
28ஆம் தேதி, மீனாட்சி, பிரியாவிடை சமேதராக சுந்தரேஸ்வரர் பிரம்மாண்ட தேரில் ஏறி நான்கு மாட வீதிகளிலும் வலம் வருவார். 29ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
எதிர்சேவை
ஏப்ரல் 28ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு அழகர்கோவில் கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் தங்கபல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார். மறுநாள் 29ஆம்தேதி அதிகாலை மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது.
கள்ளழகர் வைகையில் இறங்குதல்
30ஆம் தேதி சித்ரா பவுர்ணமி அன்று அதிகாலை 5.45 மணிக்கு தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். இவ்விழாவினில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கவிருப்பதால், அதற்கான பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.