எல்லாம் 'அவருக்குத்' தெரியும்... 'பொட்டு' கொலை குறித்து போட்டுக் கொடுத்த 'அட்டாக்' பாண்டி!
மதுரை: பொட்டு சுரேஷ் கொலைக்கான காரணம் குறித்து அட்டாக் பாண்டியிடம் தீவிர விசாரணை நடத்தியும் முழுமையான பதிலைப் பெறமுடியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய பிரமுகரின் பெயரை குறிப்பிட்டு, 'எல்லா விஷயமும் அவருக்கு தெரியும்' என்று மட்டும் கூறியதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரான பொட்டு சுரேஷ் 2013 ஜனவரி 31ம் மதுரை டிவிஎஸ் நகரில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் முதல் குற்றவாளியாகக் கருதப்படும் முன்னாள் வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் அட்டாக் பாண்டி, இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
நவி மும்பையில் உள்ள, 'கபில் ரெஸ்டாரென்டில்' பாண்டி இருந்தபோது, அம்மாநில போலீசாரும், சென்னை ஒருங்கிணைந்த குற்ற தடுப்புப் பிரிவு போலீசாரும், பாண்டியை மடக்கினர். இத்தகவல், மதுரை கமிஷனர் சைலேஷ்குமார் யாதவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரையில் இருந்து சென்றால், கைது விவரம் தெரிந்து பரபரப்பாகிவிடும் என்பதால், கோவை, சென்னை வழியாக, துணை கமிஷனர் சாமந்த்ரோகன் ராஜேந்திரா, 'பொட்டு' சுரேஷ் கொலை வழக்கை விசாரிக்கும், மதுரை, சுப்ரமணியபுரம் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி, தனிப்படை எஸ்.ஐ., முருகேசன் ஆகியோர், விமானத்தில் மும்பை அனுப்பப்பட்டனர். அன்றிரவு, போலீசாரை சந்தித்த அதிர்ச்சியில், பாண்டி எதுவும் பேசவில்லை. நேற்று முன்தினம், 21ம் தேதி பிற்பகல், அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அட்டாக் பாண்டியை, மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 4 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. அவரை போலீஸார் விமானம் மூலம் நேற்று காலை மதுரைக்கு கொண்டு வந்தனர்.
மதுரை விமான நிலையத்தில் அட்டாக் பாண்டியை படம் பிடிக்க ஏராளமான பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். ஆனால் பயணிகளுடன் இறங்கிய போலீசார், சிறப்பு அனுமதி பெற்று, வி.ஐ.பி.,க்கள் வரும் வழியாக, காரில் வெளியே வந்தனர். பாண்டியை, பத்திரிகையாளர்களின் கண்ணில் காட்டாமல், மதுரை ஆயுதப்படை மைதானத்தில், கமிஷனரின் கீழ் இயங்கும், எஸ்.ஐ.சி., எனப்படும், சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
8 மணி நேரம் விசாரணை
நேற்று காலை 8 மணிக்கு மதுரை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையர் அலுவலகத்துக்கு அட்டாக் பாண்டி கொண்டு வரப்பட்டார். இப்பகுதியில் யாரும் நுழைந்துவிடாதபடி நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு மேற்கொண்டனர். அங்கு மதுரை நகர் சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா தலைமையில் நகர் உதவி ஆணையர் முத்துக்குமார், வழக்கின் விசாரணை அதிகாரி கோட்டைச்சாமி, சிறப்பு புலனாய்வு பிரிவு ஆய்வாளர் பெத்துராஜ் உட்பட பலரும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை 8 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிபிசிஐடி எஸ்.பி. அன்புவும் திடீரென வந்து அவரிடம் விசாரணை நடத்தினார்.
அவருக்கு தெரியும்
அப்போது, முக்கிய பிரமுகரின் பெயரை குறிப்பிட்டு, 'எல்லாம் அவருக்கு தெரியும்' என, பாண்டி தெரிவித்ததாக, போலீசார் கூறினர். அதேநேரத்தில், பாண்டியிடம் வாக்குமூலம் பெறவில்லை எனவும், போலீசார் கூறினர். 'முக்கிய பிரமுகர்' யார் என்ற தகவலை, போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
பதில் சொல்ல மறுப்பு
பொட்டுசுரேஷ் கொலைக்கு முக்கியக் காரணம், இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா, கொலைக்கான சதித்திட்டம் உருவானது, குற்றவாளிகள் விவரம் குறித்து பல்வேறு கேள்விகளை போலீஸார் எழுப்பி பதில் பெற முயன்றனர். பொட்டு சுரேஷின் செயல்பாடுகள் குறித்தும், இதனால் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் சில தகவல்களை அட்டாக் பாண்டி தெரிவித்துள்ளார். ஆனாலும், என்ன காரணத்துக்காக கொலை நடந்தது என்பது குறித்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்க அவர் மறுத்துள்ளார்.
மீண்டும் விசாரணை
இந்த பதிலைப் பெற போலீஸார் பல வழிகளில் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்காததால் தவித்தனர். இதனால், ஏற்கெனவே கைதானோர் அளித்த வாக்குமூலம், இதுவரை சிக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
போட்டியால் விழுந்த கொலை
திமுக ஆட்சிகாலத்தில் மு.க.அழகிரியிடம் யார் நெருக்கமாக இருப்பது என்பதில் பொட்டு சுரேஷ் - அட்டாக் பாண்டி எழுந்த போட்டியே கொலை வரை சென்றது. பொட்டுசுரேஷ் கொலை செய்யப்பட்டதால், அதன் பின்னணி குறித்து அட்டாக் பாண்டி என்ன சொல்லப் போகிறாரோ என்ற ஆர்வம் அரசியல் ரீதியாகவும், அதிகாரிகள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அட்டாக் கூறியுள்ள தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை.
போலீஸ் காவல் கிடைக்குமா?
8 மணி நேர விசாரணைக்குப் பின்னர் அட்டாக் பாண்டி மதுரை அதிவிரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவரை நீதிமன்றம் அழைத்து சென்ற காவல்துறையினர் நீதிபதி பாரதிராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை அக்டோபர் 6 ஆம் தேதி வரை , 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அட்டாக் பாண்டி ஆஜராக்கப்பட்டதை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனிடையே அட்டாக் பாண்டியை, 10 போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.