மீனாட்சி அம்மன் கோயிலில் மதுரை ஆட்சியர் மீண்டும் ஆய்வு
மீனாட்சி அம்மன் கோயிலில் மதுரை ஆட்சியர் வீர ராகவ ராவ் மீண்டும் ஆய்வு நடத்தினார்.
மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் மதுரை ஆட்சியர் வீர ராகவ ராவ் தடயவியல் நிபுணர்களுடன் மீண்டும் ஆய்வு நடத்தினார்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று நள்ளிரவு ஒரு கடையில் தீவிபத்து ஏற்பட்டது. இது மெல்ல மெல்ல அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியதால் தீ பயங்கரமாக கொழுந்து விட்டு எரிந்தது.
விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் வைக்க போராடினர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.
தகவலறிந்த ஆட்சியர் வீர ராகவ ராவ் கோயிலுக்கு சென்று நள்ளிரவில் ஆய்வு நடத்தினார். அப்போது மின் கசிவு காரணமாக தீவிபத்து நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில் தீ முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் கோயிலுக்கு எந்த ஆபத்தும் இல்லை.எனவே பக்தர்கள் வழக்கம் போல் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தலாம்.
கிழக்கு கோபுர வாசல் மட்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படும் என்றார். இந்நிலையில் இந்த கோயிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து அறிய ஆட்சியர் வீர ராகவ ராவ் மீண்டும் ஆய்வு நடத்தினார். அவருடன் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தினர்.