வைகை கரையோர மக்களே எச்சரிக்கையா இருங்க.. தண்ணீர் அதிகமா வரப்போகுதாம்!
வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்க உள்ளதால் கரையோர மக்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை: வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்க உள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் வைகை ஆற்றில் அதிகளவு நீர் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்க உள்ளதால், மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். தற்போது 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில், நாளை கூடுதலாக 2,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
தண்ணீர் கரைபுரண்டு ஓடும் என்பதால், ஆற்றிற்குள் இறங்கவோ, கடக்கவோ கூடாது. ஆற்றில் குளிப்பதையும், பாதுகாப்பற்ற முறையில் செல்பி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.