மனநலம் பாதித்த மகனை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்.. மதுரையில்!
மதுரை: மதுரை அருகே மனநலம் பாதித்த மகனைக் கொலை செய்து விட்டு பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் தேனூரைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி குழந்தைவேல். இவரது மனைவி தனபாண்டியம்மாள். இத்தம்பதியினரின் ஒரே மகன் பால்பாண்டி (32).
அதே பகுதியிலுள்ள தனியார் பால் பண்ணையில் வேலை செய்துவந்த பால்பாண்டிக்கு, திடீரென மனநல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
ஒருமாத கால சிகிச்சைக்குப் பின், பால்பாண்டியின் மனநலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மருந்து, மாத்திரைகளை கொடுத்து அவரை மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வீட்டிற்கு வந்ததும் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாததால் மீண்டும் அவரது மனநலம் பாதிக்கப் பட்டது.
பால்பாண்டியின் செயல்பாடுகளால் உறவினர்கள் மத்தியில் அவமானமடைந்த பெற்றோர், சோகமான மனநிலையில் இருந்துள்ளனர். இதனால், குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு விஷம் தடவப்பட்ட வாழைப் பழத்தை தனது மகன் பால்பாண்டிக்கு கொடுத்து சாப்பிடச் செய்துவிட்டு, தாங்களும் விஷம் தடவிய வாழைப் பழத்தை சாப்பிட்டுள்ளனர். பின்னர் பாய் விரித்து அதில், மகனை நடுவில் படுக்க வைத்து கணவன், மனைவி இருவரும் இருபுறத்திலும் படுத்துக்கொண்டனர்.
காலையில் நீண்ட நேரமாகியும் வாசல் கதவு திறக்கப் படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கதார், வீட்டிற்குள்ளே 3 பேரும் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக சமயநல்லூர் போலீசுக்கு அவர்கள் தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.