பொட்டு சுரேஷ் கொலை வழக்கு... அட்டாக் பாண்டியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
மதுரை : பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அட்டாக் பாண்டியை 4 நாட்கள் எடுத்து காவலில் விசாரிக்க, போலீசாருக்கு, நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு நெருக்கமாக இருந்த பொட்டு சுரேஷ் கொலை வழக்கில், அட்டாக் பாண்டி மும்பையில் அண்மையில் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை மத்திய சிறையில் அவர் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை 10 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, நீதிமன்றத்தில் போலீசார் நேற்று முன் தினம் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று விசாரணை நடைபெற்றபோது, சுப்ரமணியபுரம் காவல்நிலைய ஆய்வாளர் கோட்டைசாமி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அட்டாக் பாண்டியின் தூண்டுதலின் பேரிலேயே, பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டதாக, ஏற்கனவே கைதான 3 பேர் வாக்குமூலம் அளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்தபோது, 16 செல்போன்கள் மற்றும் 3 ஏ.டி.எம்.களை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
எனவே, வழக்கினை முன்னெடுத்துச்செல்ல அட்டாக் பாண்டியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்குமாறும் காவல் ஆய்வாளர் கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து, அட்டாக் பாண்டியை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, போலீசாருக்கு, நீதிபதி பால்பாண்டி அனுமதி அளித்தார்.
மேலும் வரும் 27 ஆம் தேதி, அதிவிரைவு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா முன்பு அட்டாக் பாண்டியை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.