விடாமல் துரத்தும் லிங்கா வழக்கு: ரஜினி, கே.எஸ். ரவிகுமார் உள்ளிட்டோர் இன்று நேரில் ஆஜராக உத்தரவு
லிங்கா படத்தின் கதை விவகாரத்தில் ரஜினி, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட 6 பேர் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த லிங்கா ஏக பிரச்சினைகளைச் சந்தித்தது. ஒரு வழியாக, அவரும் இரு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்து, அவற்றில் கபாலி ரிலீசே ஆகப் போகிறது. ஆனாலும் அந்த லிங்கா சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு மட்டும் இன்னும் இழுத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் படத்தின் கதை உரிமை வழக்கு.
இந்த படம் வெளியாவதற்கு முன்பு, ரவிரத்தினம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘லிங்கா படத்தின் கதை எனக்கு சொந்தமானது. ‘முல்லைவனம் 999' என்ற படத்துக்காக அந்த கதையை தயார் செய்து வைத்திருந்தேன். அந்தக் கதையைத்தான் லிங்காவாக எடுத்துவிட்டார்கள் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், லிங்கா படத்தின் கதை யாருடையது என்பது குறித்து சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. மேலும், படத்தை வெளியிடுவதற்கு முன்பு 5 கோடி ரூபாயை நீதிமன்ற வங்கிக் கணக்கில் லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், 5 கோடி ரூபாய்க்கு வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது.
இந்த நிபந்தனைகளை ராக்லைன் வெங்கடேஷ் நிறைவேற்றியதால், லிங்கா படம் ரிலீசானது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி இயக்குநர் ரவிரத்தினம், லிங்கா படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்றும், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் லிங்கா படத்தின் கதை தங்களுக்கு சொந்தமானது என்று யாரிடமும் கூறக்கூடாது என்றும் உத்தரவிடக்கோரி மதுரையில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இன்னொரு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ராக்லைன் வெங்கடேஷ் உச்ச நீதிமன்றத்தில் ‘அப்பீல்' செய்தார். இந்த ‘அப்பீல்' மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ரூ1 கோடி ரூபாய் மட்டும் வங்கி உத்தரவாதம் செலுத்தினால் போதும் என்றும், வங்கியில் டெபாசிட் செய்த பணம் 5 கோடி ரூபாயை ராக்லைன் வெங்கடேஷ் எடுத்துக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது.
மேலும், ரவிரத்தினம் தாக்கல் செய்துள்ள வழக்கை 6 மாதத்துக்குள் மதுரை கூடுதல் முன்சீப் கோர்ட்டு விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்தநிலையில், ராக்லைன் வெங்கடேஷ் மதுரை நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ரவிரத்தினம் தாக்கல் செய்த மனுவை வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்றி விரைவில் விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன்னிலையில் பிப்ரவரி 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘இயக்குநர் ரவிரத்தினம் தாக்கல் செய்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற இயலாது. மதுரை மாவட்ட கூடுதல் முன்சீப் கோர்ட்டு இந்த வழக்கை 30.4.2016-க்குள் விசாரித்து முடிக்க வேண்டும். தினமும் விசாரணை என்ற அடிப்படையில் வழக்கை விசாரிக்கலாம்,' என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் நடிகர் ரஜினி, கே.எஸ்.ரவிகுமார், ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்ட 6 பேர் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.