மதுரையை மட்டுமல்ல சினிமாவிலேயும் கலக்குறாங்களே.. யார் இந்த செலிபிரிட்டி சுமதி?!!
மதுரையை சேர்ந்த சுமதி யானை தனது சுட்டித்தனத்தால் மக்களின் ஏகோபித்த அன்பை பெற்றுள்ளது.
மதுரை: சுமதி யானை தனது சுட்டித்தனத்தால் மக்களின் ஏகோபித்த அன்பை பெற்றுள்ளது. சினிமாக்களிலும் நடித்து பெரும் செலிபிரிட்டியாகவும் உள்ளது இந்த சுமதி யானை. தனது சுட்டித்தனத்தால் ஃபேஸ்புக்கிலும் ஏராளமான ஃபாலோயர்களை கொண்டுள்ளது மதுரை சுமதி.
பார்க்க பார்க்க கொஞ்சமும் சலிக்காதவைகளில் ஒன்று யானை. பிரமாண்ட தோற்றம், ஆடி அசைந்த நடை, ஆக்ரோஷம் என கொண்டிருந்தாலும் அச்சுறுத்தும் தன்மைகளை யானைகளை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.
அதே யானைகள் சுட்டித்தனமாக குழந்தைகளோடு குழந்தைகளாய் ஆட்டம் பாட்டம், விளையாட்டு, குறும்புத்தனம் என்று இருந்தால் சொல்லவா வேண்டும். ஆம் மதுரை சுமதி யானை காண்போரை அப்படியே தன்பக்கம் ஈர்க்கும் வல்லமை கொண்டது.
[மன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டேன்.. என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும்.. கதறிய அபிராமி]
49 வயதான சுமதி
மதுரையை சேர்ந்த சுமதி யானைக்கு தற்போது வயது 49. மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த மதன்பாபு, என்பவர் நான்காம் தலைமுறையாக யானை வளர்த்து வருகிறார்.
மைசூர் அரண்மனை
மைசூர் மகாராஜா அரண் மனையில் யானைகளைப் பராமரிக்கும் பணியில் இவர்களது பாட்டனார் துரைசாமி ஈடுபட்டு இருந்ததையடுத்து, தற்போது நான்காம் தலைமுறையாக யானை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார் மதன்பாபு.
கில்லாடி சுமதி
குட்டி யானைகள் என்னென்ன குறும்புகள் செய்திடுமோ அதே அளவு சேட்டைகளையும் குறும்புகளை செய்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொள்வதில் கில்லாடி சுமதி யானை. மதுரையில் சுமதி யானைக்கு என பெரியவர் முதல் சிறியவர் என தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
செம ஷார்ப்
பாகன்கள் சொல்கின்ற கட்டளைகளை உள்வாங்கி அதற்கேற்றாற்போல் நடந்து கொள்வதில் செம ஷார்ப் இந்த சுமதி யானை. சுமதிக்கு கேரளாவிலும் ஃபேன்ஸ் உண்டு. சுமதி யானையை கேரளாவில் பணியறிஞ்ச ஆனை என செல்லபெயரிட்டு அழைப்பது வழக்கம்.
செல்லப்பிள்ளை
இதன்காரணமாகவே, கேரளாவிற்கு சென்று அங்குள்ள யானைகளுக்கு சுமதியை கொண்டு சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர். முறையாக வனத்துறையிடம் உரிமம் பெற்று வளர்த்து வரப்படும் இந்த யானை மதுரை வனத்துறையினருக்கும், கால்நடைத்துறையை சேர்ந்த மருத்துவர்களுக்கும் செல்லப்பிள்ளை.
எந்த விழாக்களும் நடக்காது
மதன்பாபுவின் குடும்பத்திலும் ஒரு உறுப்பினராக உள்ளது இந்த சுமதி. மதுரையில் சுமதியின் பங்களிப்பு இல்லாமல் ஆன்மீகம் மற்றும் சமூகம் சார்ந்த எந்த விழாக்களும் நடக்காது.
செலிபிரிட்டி சுமதி
அதுமட்டுமில்லை பல படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த செலிபிரிட்டி இந்த சுமதி யானை. நடிகர் கார்த்திக் நடித்த பாண்டிய நாட்டுத்தங்கம் படத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய சுமதி, பாசமுள்ள பாண்டியரே, நேருக்குநேர், தாஜ்மஹால், ஏழாம் அறிவு என பல படங்களில் நடித்துள்ளது.
ஏராளமான ஃபாலோயர்ஸ்
தற்போது ஃபேஸ்புக்கிலும் மதுரை சுமதி என்ற பெயரில் அதன் உரிமையாளர் துவங்கியுள்ள கணக்கில், சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர் என்பது மெய்சிலிக்க வைக்கும் கூடுதல் தகவல்.