”வாகன சோதனையில் சிக்கிய தங்க நாணயங்கள்,வெள்ளி பொருட்கள் பறிமுதல்”
மதுரை: மதுரையில் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற வாகன சோதனையில் தங்க நாணயம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை தடுக்க மாவட்ட வாரியாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இப்பறக்கும் படையினர் கடந்த சில வாரங்களாக வாகன சோதனையில் ஈடுபட்டு ரூபாய் 1 கோடிக்கும் மேலான பணத்தைப் பறிமுதல் செய்துள்ளது.
இந்த நிலையில் மதுரை கிழக்குத் தொகுதி பறக்கும் படை துணை தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் பாண்டி கோவில் ரிங் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோவை மறித்து அதில் வந்த கார்த்திக் என்பவரை சோதனையிட்டனர். அவரிடம் 3 ஜோடி வெள்ளிக் கொலுசு, ஒரு கிராமம் தங்க நாணயம், தங்கத்தோடு இருந்தது தெரியவந்தது. ஆனால் இவைகளுக்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதை தொடர்ந்து அவைகளை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.