அதிகாரிகள் திட்டியதால் மதுரை அரசு மருத்துவமனை ஊழியர் தற்கொலை.. நடவடிக்கை கோரி சாலைமறியல்.. பரபரப்பு
அதிகாரிகள் திட்டியதால் மதுரை அரசு மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் வைரமணி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 100-க்கும் மேற்பட்டோர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் வைரமணி. 28 வயதான இவர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மதியத்திலிருந்தே வைரமணி சோர்வுடனும் விரக்தியுடனும் காணப்பட்டார். பிறகு இரவு தன்னுடைய அறையின் மின்விசியில் வைரமணி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வைரமணி தற்கொலை செய்யப்பட்டது குறித்து தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டதுடன், வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.
எனினும், ராஜாஜி அரசு மருத்துவமனை ஒப்பந்த நிறுவன மேலாளர், சுகாதார பணி மேற்பார்வையாளர்கள் வைரமணியை தரக்குறைவாக பேசி திட்டியதாகவும், அதனால்தான் மன உளைச்சல் காரணமாக வைரமணி தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
வைரமணி தற்கொலை சம்பவம் மருத்துவமனை ஊழியர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் தற்கொலைக்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த சுகாதார ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தின்போது, வைரமணி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் அரசு வேலை வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மருத்துவமனை ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டதால் உடனடியாக போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.