மதுரையில் நள்ளிரவு முதல் கொட்டித் தீர்த்த கனமழை.. மீனாட்சியம்மன் கோவிலுக்குள் புகுந்த வெள்ளம்!
மதுரையில் நள்ளிரவு முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மதுரை: நள்ளிரவு முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழை விடைபெற்றதை தொடர்ந்து தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்துவருகிறது.
[ வடகிழக்கு பருவமழை இன்று இல்லை.. நாளைதான் தொடங்குமாம்.. இந்திய வானிலை மையம் தகவல்! ]
சென்னை வானிலை மையம்
இந்நிலையில் மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
விடிய விடிய கனமழை
மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய காலை வரை இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
மீனாட்சியம்மன் கோவில்
மதுரையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பலத்த மழையால் மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் வெள்ள நீர் புகுந்தது.
காட்டாற்று வெள்ளம்
இதேபோல் சிம்மக்கல் உள்ளிட்ட இடங்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. உசிலம்பட்டி அருகே ஒய்யாண்டிபுரத்தில் கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
நொய்யலாற்றில் வெள்ளம்
இதேபோல் திருப்பூரில் இரவு பெய்த கனமழையால் தெற்கு தோட்டம் பகுதியில் வீடுகளுக்குள் நொய்யலாற்று நீர் புகுந்தது. இதனால் தாராபுரம் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.