ஸாரிம்மா.. நீங்க கர்ப்பம் இல்லை.. பிரசவத்துக்கு அட்மிட் ஆன பெண்ணை அதிர வைத்த மதுரை ஜிஎச்!
Recommended Video
மதுரை: பிரசவத்துக்கு அட்மிட் ஆன பெண்ணிடம் கர்ப்பமே இல்லை என்று கூறிய அவரை மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வீட்டுக்கு திருப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை வீரகனூர் கோழிமேடு பகுதியில் வசித்து வருபவர் நவநீதகிருஷ்ணன் (31) . இவரது மனைவி யாஸ்மின் (25). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில் இவர் கடந்த அக்டோபர் மாதம் 2017 அன்று அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது அவர் கர்ப்பமடைந்து இருப்பதாக கூறிய மருத்துவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கார்டு போட்டு சிகிச்சை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
கர்ப்பம்
அதைத் தொடர்ந்து யாஸ்மின் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் உட்பட அனைத்து பரிசோதனை செய்ததில் அவர்களும் யாஸ்மின் கர்ப்பமாக இருப்பதாக உறுதி செய்தனர்.
டெலிவரி
இதையடுத்து கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகளை கொடுத்து தொடர்ந்து சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் யாஸ்மினுக்கு 9 மாதங்கள் முடிவடைந்ததால் டெலிவரிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அரங்கு
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு வார்டில் அவரை அனைத்து வகையிலும் தயார்படுத்தினர். இதையடுத்து மகப்பேறு பார்க்கும் அரங்குக்கு யாஸ்மினை கூட்டி சென்றனர். அப்போது யாஸ்மின் கர்ப்பமே இல்லை என்று கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த யாஸ்மின் வயிற்றில் கட்டி ஏதேனும் இருக்கிறதா என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லையாம்.
இழப்பீடு தொகை
அதை தொடர்ந்து அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுக்க வந்தனர். அதில் கர்ப்பிணி அளித்தது போல் சிகிச்சை அளித்த ராஜாஜி மருத்துவமனை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் , மருத்துவர்களும் தவறாக சிகிச்சை கொடுக்கப்பட்டதால் உடல் உபாதைகளுக்கு ஆளான யாஸ்மினுக்கு தகுந்த இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என ஆட்சியர் வீரராகவராவிடம் மனு அளித்துள்ளனர்.
பதில் கூற மறுப்பு
இதுகுறித்து ஒன் இந்தியா தமிழ் இணையதளம் சார்பில் கருத்து கேட்பதற்காக சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார செவிலியரை தொடர்பு கொண்டால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களும் பதில் கூற மறுக்கின்றனர்.