6-ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் மதுரை மருத்துவ கல்லூரி முதுநிலை மாணவர்கள்
மதுரை மருத்துவ கல்லூரி முதுநிலை மாணவர்கள் தொடர்ந்து 6-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை: இடஒதுக்கீடு முறையை ஒழுங்குப்படுத்த கோரி மதுரை மருத்துவ கல்லூரி முதுநிலை மாணவர்கள் தொடர்ந்து 6-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முறைகேடாக நடத்தப்பட்ட நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும். காலி பணியிடங்களை வெளிப்படையாக வெளியிட்டு கலந்தாய்வு, இடமாறுதல் செய்ய வேண்டும்.
69 சதவீத இட ஒதுக்கீடு முறையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அரசு தலைமை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் 6-வது நாளாக காலவரையின்றி மெளன போராட்டம் மற்றும் தூக்கிட்டு தற்கொலை செய்வது போல் நூதன முறையில் போராடி வருகின்றனர்.
பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி அமைத்து கண்களின் கருப்பு துணிக் கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவப் பணியில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனியார் மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முறைகேடாக நடந்த மருத்துவர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி இன்று 6-ஆவது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.