கிரானைட் முறைகேடு: பிஆர்பி உள்பட 3 நிறுவனங்கள் மீது 2,426 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் பி.ஆர்.பி. கிரானைட், பி.கே.எஸ்.கிரானைட், ஆனந்த் கிரானைட் ஆகிய நிறுவனங்கள் மீது 2,426 பக்க குற்றப்பத்திரிகை மதுரை, மேலூர் நீதிமன்றங்களில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசுக்கு ரூ.1398 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு ரூ.16 ஆயிரத்து 400 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2012ல் அதிகாரிகள் குழுவினர் 175 குவாரிகளில் ஆய்வு செய்தனர். விதிமுறைகளை மீறி அங்கு வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை அளவீடு செய்தனர். 86 குவாரிகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் 150க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து, விசாரணை நடத்தினர். பி.ஆர்.பழனிச்சாமி உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக ஒவ்வொரு குவாரியாக கணக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இதையடுத்து 84 குவாரிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இழப்பு தொடர்பாக குவாரி உரிமதாரர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முறைகேடுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரி உரிமதாரர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது.
பிஆர்பி, ஆனந்த், பிகேஎஸ் கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகளால் ரூ.1398.37 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் இன்று மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷீலா, தனிப்படை இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் 2,426 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மேலூர் குற்றவியல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் செல்வக்குமார் முன்னிலையில் தாக்கல் செய்தனர்.
மேலூர், கீழவளவு பகுதிகளில் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்து, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பிஆர்பி, ஆனந்த் மற்றும் பிகேஎஸ் நிறுவனங்கள் மீது தலா ஒன்று என மொத்தம் 3 வழக்குகள் தொடர்பாக மேலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, பிஆர்பி மீது இடத்தை ஆக்கிரமித்ததாக மேலூரை சேர்ந்த சுமதி என்பவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதுரை ஜேஎம் 1வது நீதிமன்றத்தில் இன்று பிஆர்பி மீது தனியாக ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.