இலவச வீட்டு மனை பட்டா விவகாரம்.. சகாயம் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கோர்ட் நோட்டீஸ்
இலவச வீட்டு மனை பட்டா விவகாரத்தில் சகாயம் ஐஏஎஸ் அதிகாரிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை: இலவச வீட்டு மனை பட்டா விவகாரத்தில் சகாயம் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் பணிபுரிந்த போது 2012-ம் ஆண்டு 17 பேருக்கு திருப்பரங்குன்றம் நிலையூர் அருகே இடம் ஒதுக்கீடு செய்து இலவச பட்டாக்களை வழங்கினார். இதையடுத்து நிலையூர் இடத்தில் 17 பேரும் வீடு கட்டும் பணியை தொடங்கினர்.
ஆனால் இதற்கு நிலையூரில் கடும் எதிப்பு கிளம்பியது. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவ்விசாரணையில் சகாயம் ஐஏஎஸ் கொடுத்த பட்டா செல்லாது என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக சகாயத்துக்குப் பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியரான சுப்பிரமணியத்திடமும் 17 பேரும் முறையீடு செய்திருக்கின்றனர். ஆனால் அரசு ஆவணங்களின்படி 17 பேருக்கும் நிலையூரில்தான் இடம் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது மாவட்ட ஆட்சியர் வீரராக ராவிடமும் இந்த பிரச்சனை சென்றிருக்கிறது. அவரும் நிலையூரில்தான் நிலம் இருக்கிறது என மீண்டும் அரசு தரப்பு பதிலாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கே.கே. ரமேஷ் என்பவர் ஆட்சியாளர்கள் உண்மைக்கு புறம்பான தகவலை வழங்கியதாக வழக்கு தொடர்ந்தார். 17 பேரும் தங்களுக்கு இழப்பீடும் கோரியிருந்தனர்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, சகாயம் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.