தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்தபோது கலெக்டர் எங்கே சென்றிருந்தார்? -ஹைகோர்ட் சரமாரி கேள்வி
துப்பாக்கிச் சூடு நடந்த போது மாவட்ட ஆட்சியர் எங்கே சென்றிருந்தார் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை: தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்த போது மாவட்ட ஆட்சியர் எங்கே சென்றிருந்தார் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் மக்கள்அமைதி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் 100-ஆவது நாளை எட்டியபோது மக்கள் பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றனர்.
அப்போது 144 தடையை மீறி பேரணி சென்றதால் போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அதையும் மீறி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் அடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு
இதையடுத்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல முற்பட்டனர். அப்போது அங்கிருந்த போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
அமைதியாக...
இது தொடர்பாக மதுரை ஹைகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அமைதியாக நடந்த 99 நாள் போராட்டத்தின் வீடியோவை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.
ஆட்சியர் எங்கே
அதுபோல் தூத்துக்குடியில் 99 நாட்கள் நடந்த போராட்டம் பற்றிய உளவுத்துறை அறிக்கை தர உத்தரவிட்டுள்ளனர். துப்பாக்கி விவரங்களையும் அறிக்கையாக அளிக்க போலீஸுக்கு உத்தரவிட்டனர். துப்பாக்கிச் சூடு நடந்த போது மாவட்ட ஆட்சியர் எங்கே இருந்தார் என வினவினர்.
ஜூலை 18க்கு ஒத்திவைப்பு
எந்தெந்த வகை துப்பாக்கிகள் கலவரத்தின்போது பயன்படுத்தப்பட்டன? என்பதையும் அறிக்கையாக அளிக்க வேண்டும் என்ற நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.