தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைய உள்ளது.. ஜூன் 14-க்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைய உள்ளது என்பது குறித்து வரும் ஜூன் 154-ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைய உள்ளது என்பது குறித்து வரும் ஜூன் 14-ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி கடைசியில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழகம், பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம், அசாம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களில் டெல்லியில் உள்ளது போன்று அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
மத்திய அரசுக்கு கடிதம்
எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்கத் தேர்வு செய்வதற்காக செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை அருகே தோப்பூர் ஆகிய 5 இடங்களில் தமிழக அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டு தயாராக இருப்பதாகவும் இவற்றில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தை மத்திய அரசு தேர்வு செய்து எய்ம்ஸ் மையத்தை அமைக்கலாம் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் மூலம் குறிப்பிட்டார்.
ஈரோட்டில் அமைக்க வேண்டும்
இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக இரண்டானது போல் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைப்பது என்பது குறித்து தகராறு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கோரிக்கை விடுத்தார்.
இடம் பரிசீலனை
2018-2019-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின்போது மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அரசு கூறுகையில், 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு பரிந்துரை செய்த இடங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜூன் 14-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது என்று கேட்டு மத்திய அரசு மீது கே.கே. ரமேஷ் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க காலதாமதம் ஆவதற்கு காரணம் என்ன என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியதோடு, வரும் ஜூன் 14-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.