மதுரை ஆதீனத்திற்கு செல்ல நித்யானந்தாவுக்கு தடை... ஹைகோர்ட் உத்தரவு!
மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான மடத்தில் பூஜை செய்ய நித்யானந்தாவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மதுரை: மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான மடத்தில் பூஜை செய்ய நித்யானந்தாவிற்கு உயர்நீதிமன்ற கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஜெகதலப்பிரதாபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது மதுரை ஆதீன மடம். இதில் 292வது ஆதீனமாக அருணகிரிநாதர் உள்ளார். கடந்த 2015ல் நித்யானந்தா ஆதீனத்திற்குள் நுழைய முற்பட்டார்.
சட்டவிரோத ஆவணங்கள் மூலம் நித்தியானந்தா 293வது ஆதீனமாக பொறுப்பேற்க வந்தார். ஆனால் இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நித்யானந்தா ஆதீனமாக முடிசூட்டிக் கொள்ள முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றமும் இந்த உத்தரவை உறுதி செய்திருந்தது.
சைவ மதத்தை சேராதவர் ஆதீனமாக பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்திருந்ததையும் மனுதாரர் சுட்டிகாட்டி நித்யானந்தா ஆதீனத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் மதுரை ஆதீனத்திற்குள் நுழைய அனுமதி கோரியும், போலீஸ் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் நித்தியானந்தா சார்பில் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நித்யானந்தா மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. மேலும் நித்யானந்தா ஆதீனத்திற்குள் செல்ல இடைக்காலத் தடை விதித்ததோடு வழக்கின் விசாரணையை 4 வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது.