சசிகலா புஷ்பா குடும்பத்துடன் வரும் 29-ல் ஆஜராக மதுரை ஹைகோர்ட் உத்தரவு!!
மதுரை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலாபுஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் வரும் 29-ந் தேதியன்று நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீட்டில் வேலை செய்துவந்த இளம்பெண் பானுமதி, அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகியோர் சசிகலாபுஷ்பா குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் செய்தனர். இதனால் சசிகலாபுஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலாபுஷ்பாவின் தாயார் கவுரி ஆகியோர் மீது தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சசிகலாபுஷ்பா எம்.பி. உள்பட 4 பேரும் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று தற்போது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ராஜ்யசபாவில் எனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறினேன். இதன்பின்பு தான் எங்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை.
நான் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். என்னை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
அத்துடன் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளவும் உத்தரவிட்டது. நான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளேன்.
இவ்வாறு சசிகலா புஷ்பாவின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
சசிகலாபுஷ்பா உள்பட 4 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து அவர்கள் மீது புகார் கொடுத்துள்ள பானுமதி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் அனைத்தும் நேற்று நீதிபதி வி.எம்.வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. இருதரப்பினரின் வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.
சசிகலாபுஷ்பா எம்.பி.யின் தாயார் கவுரியின் முன்ஜாமீன் மனு செவ்வாயன்று விசாரணைக்கு வருவதால், அந்த மனுவோடு சேர்த்து இந்த மனுக்களையும் விசாரிப்பதாக கூறிய நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையின் முடிவில், சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் வரும் 29-ந் தேதியன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.