மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்
மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு இருக்கிறது.
மதுரை: மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு இருக்கிறது. மேலும் இறுதி விசாரணையை டிசம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டு இருக்கிறது.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் "மதுரை ஆதீனம் மடம் 2500 ஆண்டு பழமையானது. இதன் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார். கடந்த 2012-ல் பிடுதியில் தியான பீடம் நடத்தி வரும் ராஜசேகர் என்ற நித்யானந்தா ஆதீன மடத்துக்குள் நுழைய முற்பட்டார். சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நித்யானந்தா தன்னை ஆதீனம் மடத்தின் 293-வது மடாதிபதியாக பிரகடணப்படுத்திக் கொண்டார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் ''நித்யானந்தா மதுரை ஆதீன மடம் உள்பட பல்வேறு சைவ மடங்களை சட்டவிரோதமாக கைப்பற்ற பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறார். இதனால் ஆதீன மடத்துக்குள் நுழையவும், அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு தடை விதிக்கவும், நித்யானந்தாவிடமிருந்து ஆதீன மடத்தை பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த அக்டோபர் 11ல் இருந்து மதுரை ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நவம்பர் 23 ஆம் தேதி நீதிபதி மகாதேவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா தரப்பில் எவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கினை இறுதி விசாரணைக்காக டிசம்பர் 7 ஆம் தேதிக்கு (இன்று ) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இன்று விசாரணைக்கு வந்தபோது மதுரை ஆதீனம் மடத்துக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் எனவும் மேலும் இறுதி விசாரணை மற்றும் தீர்ப்புக்காக வழக்கினை டிசம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.