மணல் குவாரிகளை மூடுவதற்கு தடை கோரிய வழக்கு : தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மணல் குவாரிகளை மூடுவதற்கான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
மதுரை : தமிழகத்தில் இயங்கி வரும் மணல் குவாரிகளுக்கு தடை கோரிய வழக்கில், மதுரை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மணலை எடுத்துச் செல்லவும், விற்பனை செய்யவும் அனுமதி கோரி புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கில், தமிழகத்தில் இயங்கும் அனைத்து மணல் குவாரிகளையும் ஆறு மாதத்தில் மூட வேண்டும் என்றும், புதிய குவாரிகளுக்கு இனி அனுமதி வழங்க கூடாது என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி கடந்த மாதம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை குறித்து வாதிட்டார்.
இந்த வழக்கில் எதிர் மனுதாரரான ராமையா தரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்து உத்தரவிட்டு உள்ளனர்.