அமெரிக்காவில் மகன் கொலை: இழப்பீடு கேட்டு தந்தை மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு
மதுரை: அமெரிக்காவில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட என்ஜினீயரின் தந்தை இழப்பீடு கேட்டு மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்கக் கோரி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவரின் மகன் சரவணன். அமெரிக்காவில் பணியாற்றி வந்த சரவணன், கடந்த 2006ம் ஆண்டு கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மகனது மரணத்திற்கு இழப்பீடு வேண்டி மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார் ராமசுப்பிரமணியன். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-
என் மகன் சரவணன், எம்.சி.ஏ பட்டதாரி. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். கடந்த 7.1.2006 அன்று கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். கடுமையான போராட்டத்துக்கு பின்பு, அவனது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்தோம். என் மகனை சுட்டுக்கொன்றவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது போன்ற எந்த விவரமும் தெரியவில்லை. வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் கொல்லப்பட்டால் அதுதொடர்பான வழக்கை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
எனது மகனின் இறப்புக்கு இழப்பீடு கேட்டும், எனது மகன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுக்கு மனு கொடுத்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனது மகனை நம்பியே எங்கள் குடும்பம் இருந்தது. அவன் இறந்த பின்பு நானும், எனது மனைவியும் மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கையை நடத்தி வருகிறோம். எனவே, உரிய இழப்பீடு வழங்கவும், வழக்கு விசாரணையை மத்திய அரசு கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் எம்.கண்ணன், பி.ஸ்டாலின் ஆஜராகி வாதாடினர்.
அதனைத் தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர், தமிழக அரசின் தலைமை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு அவர் தள்ளிவைத்தார்.