'வகுப்பறையிலேயே நடந்த ஆட்டங்கள்!' - நிர்மலா விவகாரத்தில் சிக்கும் ஆதாரங்கள்!
உயர்கல்வித்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளை களையெடுப்பதற்காக பல்வேறு அமைப்புகளைக் கொண்ட போராட்டக்குழுவை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தொடங்கியுள்ளனர்.
Recommended Video
மதுரை : பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிர்மலா தேவியின் பின்புலத்தில் இருப்பவர்கள் அனைவரையும் களையெடுக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் சார்பில் போராட்டக் குழு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு பயிற்சிக்காக சென்றிருந்த போது உயர் அதிகாரிகள் மூலம் மாணவிகளுக்கு 'ஆப்பர்டுனிட்டி' கிடைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை தவறான பாதைக்கு வழி நடத்த முயன்றார். இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் இதிர் தொடர்புடைய கறுப்பு ஆடுகள் அனைத்தும் களையெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உயர்கல்வித்துறையில் நுழைந்துள்ள கறுப்பு ஆடுகளைக் களையெடுக்கும் வரையில் ஓயப் போவதில்லை' என அறிவித்துள்ளனர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள். இதற்காக, பல்வேறு அமைப்புகள் கொண்ட போராட்டக் குழு ஒன்றையும் தொடங்கியுள்ளனர். ' நிர்மலாதேவி விவகாரத்தில் பல்கலைக்கழக நிர்வாகிகள் பலரும் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களையும் கைது செய்ய வேண்டும்' என இந்தக் குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தலைமறைவான பெரும்புள்ளிகள்
தமிழகப் பல்கலைக்கழகங்களின் ஊழல் விவகாரங்களைக் கையில் எடுத்த ஆளுநர் பன்வாரிலாலுக்கு, நிர்மலாதேவி விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் தலைவர் சந்தானம் மதுரையில் விசாரணையைத் தொடங்கிவிட்டார். மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் தகவல் அளிக்கலாம் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தனிநபர் விசாரணைக் கமிஷன். இது தவிர, சி.பி.சி.ஐ.டி எஸ்.பி ராஜேஸ்வரி தலைமையிலான குழுவும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. அடுத்தடுத்து இரண்டு விசாரணைகளால் அதிர்ந்து போன, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் தலைமறைவாகிட்டதாகவும் தகவல் பரவியுள்ளது.
மாணவியாக இருந்து பேராசிரியையான நிர்மலா
இதையடுத்து, நிர்மலாதேவி பணிபுரியும் கல்லூரி பேராசிரியர் ஒருவரிடம் பேசினோம். "இதே கல்லூரியில் இளநிலை, முதுநிலை படித்த நிர்மலா, பணிக்கு வருவதற்கு இதே கல்லூரி நிர்வாகி ஒருவர் காரணமாக இருந்தார். அவருடன் இருந்த பழக்கத்தின் காரணமாகத்தான், அடுத்தடுத்த தவறுகளுக்குத் துணை போனார் நிர்மலா.
நிர்மலா போல பல பேராசிரியர்கள்
கல்லூரி மாணவிகளில் யார் தங்கள் வழிக்கு வருவார்கள் என்பதைக் கணிப்பதில் நிர்மலா கில்லாடியாக இருந்தார். அவர் மட்டுமல்ல, அறிவியல் பாடம் எடுக்கும் சில பேராசிரியர்களும் இதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தனர். வகுப்பறையிலேயே மாணவிகளின் வாட்ஸ்அப் எண்களுக்கு மெசேஜ் அனுப்புவது, போட்டோ அனுப்பச் சொல்வது என எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் இந்தக் காரியங்களைச் செய்து வந்தனர். இந்தக் காட்சிகளை பிற மாணவிகளும் பெரிதாகக் கண்டு கொண்டதில்லை.
பிராக்டிகல் மதிப்பெண்ணிற்காக
பிராக்டிகல் மதிப்பெண் அச்சத்தில் இருந்த மாணவிகளை, தங்கள் பக்கம் கொண்டு வருவதிலும் இவர்கள் கில்லாடியாக இருந்தார்கள். இவர்களின் தொடர் டார்ச்சர்களால் ஏராளமான மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கல்லூரியில் இருந்து டி.சி வாங்கிக் கொண்டு வெளியேறிவிட்டனர். சிலர் நிர்வாகத்தின் கவனத்துக்கும் புகார்களைக் கொண்டு சென்றனர். அவர்களை மிக எளிதாக சரிக்கட்டிவிட்டனர் இந்தப் பேராசிரியர்கள். 'விருப்பமிருந்தால்தான் அனைத்தும், இதனால் எங்களுக்கு எந்தவித நஷ்டமுமில்லை' என வெளிப்படையாகவே அவர்கள் மிரட்டியுள்ளனர்.
ஆடியோ லீக்கானது எப்படி?
இப்போது தகவல்கள் இந்தளவுக்கு கசிந்ததற்குக் காரணம், நிர்மலா பணிபுரியும் கல்லூரியின் சில நிர்வாகிகள்தான். அவர்களுக்கு நிர்மலாதேவியின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை. உயர்கல்வித்துறையின் அனைத்து மட்டத்திலும் செல்வாக்கை வளர்த்துக் கொண்டு, நிர்வாகத்தையே நிர்மலா மிரட்டி வருவதை அவர்கள் விரும்பவில்லை. கல்லூரி நிர்வாகத்தில் உள்ள மூன்று கோஷ்டிகளில் ஒரு பிரிவினரின் கவனத்துக்கு இந்த ஆடியோவைக் கொண்டு சென்றனர் சம்பந்தப்பட்ட மாணவிகள். ' நிர்மலாவைப் பழிவாங்க இப்படியொரு வாய்ப்பு கிடைக்காது' என முடிவு செய்து, அன்றே இரண்டு ஊடகங்களின் கவனத்துக்கு ஆடியோவைக் கொண்டு சென்றனர்.
அச்சத்தில் மாணவிகள்
பழைய செயலர் ஒருவர் கொடுத்த தைரியத்தில்தான் இதுவரையில் நிர்மலா ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். கைது சம்பவத்துக்குப் பிறகு, ' இனி எந்தக் காலத்திலும் நிர்வாகத்தில் நிர்மலாவின் தலையீடு இருக்காது' என நிம்மதிப் பெருமூச்சுவிட்டுள்ளனர். நிர்மலா கைதால் சில மாணவிகளும் அச்சத்தில் உள்ளனர். ' எங்க பேர் வெளிய வருமா சார்?' என அச்சத்துடன் விசாரிக்கின்றனர். இந்த சம்பவங்களின் பின்னணியில் நிர்மலா பணிபுரியும் கல்லூரி நிர்வாகிகள், காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் என அனைவரையும் வளையத்தில் கொண்டு வந்தால்தான், பாலியல் வலையின் மூலத்தை அறிய முடியும்" என்றார் உறுதியாக.
பேராசிரியர்கள் போராட்டக்குழு
இந்நிலையில், காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ஆசிரியர் சாரா அலுவலர் சங்கம், அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் ஆகியவை இணைந்து போராட்டக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில இணைச் செயலாளராக இருக்கும் இவர், பேராசிரியர்களின் கோரிக்கைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடக் கூடியவர்.
24ம் தேதி போராட்டம்
வரும் 24-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவும் இந்தக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய பேராசிரியர் ஒருவர், "24-ம் தேதி நடத்தப்படும் போராட்டத்தோடு இந்த விவகாரத்தை முடித்துவிட நாங்கள் விரும்பவில்லை. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில்தான் நிர்மலா வந்து தங்குவார். அவர் தங்கும் அறையில் வேறு விருந்தினர்கள் இருந்தாலும், அவர்களை உடனடியாக அங்கிருந்து கிளம்பச் சொல்லிவிடுவார்கள். அவரை யார் சந்திக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதெல்லாம் பரம ரகசியம். இதைக் கண்டறிய ஒரே வழிதான் உள்ளது.
அதிர வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்
நிர்மலா தங்கிய நாட்களில் அங்கிருக்கும் சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தால், பல்கலைக்கழகத்தின் முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள். சொல்லப்போனால், நிர்மலாவோடு பல்கலைக்கழகத்தின் முக்கிய பிரமுகர் ஒருவர் தொடர்ந்து சந்தித்துப் பேசும் காட்சிகளும் அதில் இருப்பதாச் சொல்கின்றனர். ஒரே ஒரு நிர்மலா தேவியோடு வழக்கை முடித்துவிடுவதற்கு சிலர் அவசரம் காட்டுகிறார்கள். பல ஆண்டுகளாக நடந்து வந்த பாலியல் வலையின் அனைத்து சிக்கல்களையும் ஆராய வேண்டியது அவசியம்.
கப்பலேறிய பல்கலை. மானம்
இந்த விவகாரத்தால் பல்கலைக்கழகத்தின் மானமே போய்விட்டது. பொதுவாக, உயர்கல்வித்துறையின் மீது ஒரு புகார் வந்தால், அத்துடன் அந்த விஷயத்தை கமுக்கமாக முடித்துவிடவே விரும்புகிறார்கள். நிர்மலா விவகாரம் அப்படிப்பட்டதல்ல. இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து முக்கியப் புள்ளிகளும் கைது செய்யப்பட வேண்டும். உயர்கல்வித்துறையை சீர்படுத்த வேண்டும். இதைவிட்டால், மாணவிகளைக் காப்பதற்கு வேறு சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை. எனவேதான், உறுதியான பேராசிரியர்கள் தலைமையில் போராட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை ஆணையத்தின் போக்கு திசைமாறினால், தெருவில் இறங்கிப் போராடுவதற்கும் நாங்கள் தயங்க மாட்டோம்" என்றார் உறுதியாக.