கன்னியாகுமரியில் ஒரு கடையும் இல்லை. சுற்றுலாப் பணிகள் ஏமாற்றம்.. மதுரையும் வெறிச்!
கன்னியாகுமரி: காவிரிப் பிரச்சினை தொடர்பாக இன்று வர்த்தகர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரின் அழைப்பால் நடந்த பந்த் போராட்டம் கிட்டத்தட்ட முழுமையாக இருந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கன்னியாகுமரியில் ஒரு கடை கூட திறக்கப்படவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் உள்ள காந்தி பஜார் பார்க் வீயூ, தமிழன்னை பூங்கா சாலை ஆகிய இடங்களில் கடைகள் மூடப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலாவாக வந்திருந்த மக்கள் கடைகள் இல்லாததால் எந்தப் பொருளையும் வாங்க முடியாமல் ஏமாற்றத்துக்குள்ளானார்கள். அதேசமயம் போராட்டம் குறித்து அறிந்து பலர் வராததால் கூட்டமும் அதிகம் காணப்படவில்லை.
இருப்பினும் கண்ணகி தெரு, படகுத்துறை சாலை ஆகிய இடங்களில் ஒரு சில கடைகள் திறந்திருந்தன. அதேபோல திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை வழக்கம் போல இயக்கப்பட்டது.
மதுரையில்
மதுரையில் போராட்டம் முழு அளவில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோல் பங்குகள் இயங்கவில்லை. அரசு பஸ்களும் கூட பாதி அளவுக்குத்தான் ஓடுகின்றன. ஆட்டோ, டாக்சி கூட சரியாக ஓடவில்லை. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மருந்துக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட பாதி அளவிலான பஸ்கள் ஓடவில்லை. காரணம், திமுக டிரைவர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளதால் பஸ் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுரையின் அனைத்து வர்த்தகப் பகுதிகளிலும் நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. கீழ மாசி வீதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தனியார் பள்ளிகள் பல விடுமுறை அறிவித்திருந்தன. இதனால் அவை மூடப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள் மட்டுமே இயங்குகின்றன. தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. பெட்ரோல் பங்குகளும் திறக்கப்படவில்லை. மூடப்பட்டுள்ளன. மொத்தத்தில் மதுரையின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.