குற்றாலம் அருவியில் குளித்தபோது தலையில் கல் விழுந்து காயமடைந்தவர் மரணம்
குற்றாலம்: குற்றாலம் அருவியில் சமீபத்தில் குளித்தபோது தலையில் கல் விழுந்து படுகாயமடைந்த நபர் தற்போது காயம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
குற்றாலத்தில் தற்போது சீசன் காலமாகும். மழை இல்லையென்றாலும் அருவிகளில் தண்ணீர் குறைந்து கொட்டினாலும் குளிக்க வரும் பயணிகளின் எண்ணிக்கை மட்டும் குறைந்த பாடில்ல.
கடந்த 5 தேதி குற்றாலம் மெயின் அருவியில் மதுரையை சார்ந்த பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் குளித்துக் கொண்டிருந்த போது அருவியின் மேல் பகுதியிலிருந்து உருண்டு வந்த பாறை கல் பாலகிருஷ்ணன் தலையில் விழுந்ததில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
உடனடியாக அவரை மெயின் அருவி பகுதியில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் நண்பர்களோடு மதுரைக்கு காயத்தோடு திரும்பினார்.
அங்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் இன்று காலை மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.
இது குறித்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.