உதட்டு பிளவு, மேல் அன்ன சீரமைப்புக்காக 11,000 இலவச ஆபரேஷன்கள்.. மதுரை மீனாட்சி மிஷன் சாதனை!
உதட்டு பிளவு, மேல் அன்ன சீரமைப்புக்காக 11,000 இலவச அறுவைசிகிச்சைகள் செய்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
மதுரை: உதட்டு பிளவு, மேல் அன்ன சீரமைப்புக்காக 11,000 இலவச அறுவைசிகிச்சைகள் செய்து மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் முக்கியமான பெருநகரங்களுக்கு வெளியே எந்தவொரு மருத்துவமனையாலும் உதட்டு பிளவு மற்றும் மேல் அன்ன சீரமைப்பு அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டதில் இதுவே மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
இதுதொடர்பாக அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரையை தலைமையகத்தைக் கொண்டு செயல்படும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டதிலிருந்து, உலகத்தரம் வாய்ந்த சுகாதார சேவை அனைவருக்கும் கிடைக்குமாறு செய்துவருகிறது. 'எந்தவொரு மனிதரும், முதல் தரமான மருத்துவ சிகிச்சையை பெற வசதியில்லாத ஏழையாக இல்லை.' என்ற நிலையை உருவாக்க வேண்டுமென்ற இம்மருத்துவமனையின் குறிக்கோளை செயல்படுத்தும் வகையில் இதன் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 110 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தனது சேவையை தொடங்கிய இம்மருத்துவமனை, இன்றைக்கு தென் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பன்முக உயர் சிறப்பு உடல்நல பராமரிப்பு பெரு மையமாக வளர்ச்சியடைந்திருக்கிறது.
1,000 படுக்கை வசதிகள் மற்றும் 47 சிறப்புப்பிரிவுகளை கொண்டிருக்கும் இது, மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான மாவட்டங்களில் வசிக்கும் எண்ணற்ற நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்கி வரும் மருத்துவமனையாக திகழ்கிறது. இங்கு வருகை தரும் 1,500-க்கும் அதிகமான நோயாளிகளுக்கு தரமான சுகாதார சேவையை கட்டுப்படியாகக்கூடிய எளிய கட்டணத்தில் வழங்குவதற்கு மிக நவீன தொழில்நுட்பம், மருத்துவ நேர்த்தி நிலை மற்றும் கனிவோடு இந்திய விருந்தோம்பலின் பாரம்பரியத்தையும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஒருங்கிணைத்து தனது செயல்பாட்டின் ஒரு அங்கமாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
இலவச அறுவை சிகிச்சைகள்
மீனாட்சி மிஷன் மருத்துவமனையானது, அது வழங்கும் சேவைகளுள் ஒரு வலுவான அறநலக்கூறினை உள்ளடக்கி சேவையாற்றி வருகிறது. குழந்தைகளுக்கு புற்றுநோய்க்கு இலவச சிகிச்சையையும் மற்றும் மூக்கும் வாயும் இணைந்த நிலையிலுள்ள சிறார்களுக்கு இலவச அறுவைசிகிச்சையையும் இது வழங்குகிறது. தீராநோயுற்றோர் கவனிப்பு இல்லம், உடன் இணைக்கப்பட்டு இயங்குகின்ற இந்தியாவின் வெகுசில மருத்துவமனைகளுள் இதுவும் ஒன்றாகும். மீனாட்சி மிஷன் மருத்துவமனை, பரவலாக பாராட்டும், வரவேற்பும் பெற்றிருக்கிற ஒரு தனிச்சிறப்பான டெலிமெடிசின் செயல்திட்டத்தையும் நடத்தி வருகிறது.
உயர்ந்த எண்ணிக்கையில்
உலகின் முன்னணி உதட்டு பிளவு சிகிச்சைக்கான அறக்கொடை நிறுவனமான யுஎஸ்ஏ-வின் ஸ்மைல் டிரெயின் என்ற அமைப்பின் ஒத்துழைப்போடு 2003-ம் ஆண்டில் இத்திட்டத்தை தொடங்கியதிலிருந்து குழந்தைகள் மற்றும் வயதுவந்த நபர்களுக்காக இலவசமாக செய்யப்பட்ட உதட்டு பிளவு மற்றும் மேல் அன்ன சீரமைப்பு அறுவை சிகிச்சைகளில் 11,000 என்ற மைல்கல்லை மதுரையின் மீனாட்சி மிஷன் மருத்துவமனை கடந்திருக்கிறது. இந்தியாவில் முக்கியமான பெருநகரங்களுக்கு வெளியே எந்தவொரு மருத்துவமனையாலும் உதட்டு பிளவு மற்றும் மேல் அன்ன சீரமைப்பு அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டதில் இதுவே மிக உயர்ந்த எண்ணிக்கை என கூறப்படுகிறது.
11000 இலவச அறுவை சிகிச்சை
1000 படுக்கை வசதிகள் கொண்ட மதுரையின் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் குருசங்கர் இதுகுறித்து பேசினார். உதட்டு பிளவு மற்றும் மேல் அன்ன சீரமைப்புக்கு இலவசமாக செய்யப்பட்ட அறுவைசிகிக்சைகளில் 11,000 என்ற மைல்கல்லை கடந்திருப்பது மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலுள்ள அனைவருக்கும் அதிக பெருமையும், திருப்தியும் அளிக்கும் தருணம் என்றார்.
10 லட்சம் நபர்கள்..
ஒவ்வொருநாளும் சராசரியாக இரு உதட்டு பிளவு மற்றும் மேல் அன்ன சீரமைப்பு அறுவைசிகிக்சைகளை இலவசமாக நாங்கள் செய்து வந்திருக்கிறோம். பலன் பெற்ற நோயாளிகளுள் பெரும்பாலானவர்கள் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இச்சாதனை அளவை எட்டியிருக்கின்ற போதிலும் பிரச்சினையின் அளவும், தீவிரமும் மிகப்பெரியதாகும் என்றார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஏறக்குறைய 35,000 குழந்தைகள், உதட்டு பிளவு, மேல் அன்ன பிரச்சினையோடு பிறக்கின்றனர். இந்நாட்டில் 10 இலட்சத்துக்கும் அதிகமான நபர்கள் இன்னும் சிகிச்சை பெறாத நிலையிலேயே இருக்கின்றனர் என்பதும், இந்நோயாளிகளுள் பெரும்பான்மையோர், வசதியற்ற, ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.
கொல்லப்படும் குழந்தைகள்
இக்கோளாறை சரிசெய்வதற்கான அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படாமல், உதட்டு பிளவுள்ள முகத்துடன் வாழ்கின்ற குழந்தைகள், அவர்களது வாழ்நாள் முழுவதிலும் தனிமை, அவமானம் மற்றும் மனத்துயரோடு வாழவேண்டியிருக்கிறது. அவர்களால் முறையாக பேசவோ அல்லது உணவு உண்ணவோ இயலாது. பிற குழந்தைகளைப்போல பள்ளிக்கு செல்வதிலும் அவர்களுக்கு பிரச்சினையிருக்கிறது. இத்தகைய குறைபாடுள்ள பல குழந்தைகள் பிறந்தவுடனேயே கொல்லப்பட்டு விடுகின்றனர் அல்லது பெற்றோர்களால் கைவிடப்பட்டுவிடுகின்றனர் என்றும் டாக்டர் குருசங்கர் தெரிவித்தார்.
45 நிமிடங்களில் அறுவை சிகிச்சை
இதுகுறித்து மேலும் பேசுகையில், உதட்டு பிளவு அல்லது மேல் அன்னத்தை சீரமைப்பது என்பது 45 நிமிடங்களில் எடுக்கக்கூடிய ஒரு சிறிய அறுவைசிகிச்சை முறையாகும் என்பதை அநேக பெற்றோர்கள் உணர்ந்திருக்கவில்லை. எனினும், இத்தகைய பெற்றோர்களில் பெரும்பாலானோர் இந்த அறுவைசிகிச்சை செலவை மேற்கொள்ளும் அளவுக்கு வசதியுடையவர்கள் அல்லா என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் தான் இப்பிரச்சினையுள்ள குழந்தைகளுக்கு வாழ்க்கையையே மாற்றுகின்ற விளைபயன்களோடு, உதட்டு பிளவு மற்றும் மேல் அன்ன சீரமைப்புக்கான இலவச அறுவைசிகிச்சை திட்டம் போன்றவை சமுதாயத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவக்கூடியதாக இருக்கின்றன என்றும் அவர் என்று குறிப்பிட்டார்.
பேசுவதற்கும் சிகிச்சை
2014ஆம் ஆண்டில் மொத்தத்தில் 778 உதட்டு பிளவு மற்றும் மேல் அன்ன சீரமைப்பு அறுவைசிகிச்சைகளையும், 2015ஆம் ஆண்டில் 640 அறுவைசிகிச்சைகளையும் மற்றும் 2016ஆம் ஆண்டு இன்னும் 808 அறுவைசிகிச்சைகளையும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை இலவசமாக செய்திருக்கிறது. இத்தகைய அறுவைசிகிச்சை செய்யப்படுகிற குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை, இலவச மருத்துவ பரிசோதனைகள், மருத்துவமனையில் இலவசமாக தங்கும் வசதி மற்றும் ஒரு நாளில் 3 முறை இலவச உணவு ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், இயல்பாக பேசுவதற்கான சிகிச்சை, 24 மணி நேரத்திற்கும் செவிலியர் சேவை, ஆலோசனை மற்றும் மறுவாழ்வுசேவை ஆகியவையும் கட்டணமின்றி இலவசமாக இவர்களுக்கு கிடைக்கிறது.