மதுரையில் மீனாட்சி ஆட்சி....கோலாகலமாக நடந்த பட்டாபிஷேகம் - வீடியோ
மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று பட்டத்தரசியானார் மீனாட்சி. நேற்று நடந்த பட்டாபிஷேக விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மதுரை: மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாகக ஐதீகம். சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல்28 ல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8ஆம் நாளான நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்றது.
பட்டாபிஷேகத்தை முன்னிட்டு மஞ்சள் பட்டு உடுத்தி பச்சை பட்டு தலைப்பாகை வேப்பம்பூ மாலை அணிந்து சர்வ அலங்காரத்தில் அம்மன் ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினார்.
அம்மனுக்கு ரத்தின கற்களால் இழைத்த ராயர் கிரீடத்திற்கு கும்பங்களில் இருந்து புனித நீராடல் நடத்தி தீபாராதனை நடத்தி அம்மனுக்கு சாற்றினர். ரத்தின கற்களால் பதிக்கப்பட்ட செங்கோல் இரவு 7:05 மணிக்கு அம்மனிடம் வழங்கப்பட்டது. மங்கல மேளம், சங்கொலி முழங்க அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
இதனையடுத்து மதுரையில் மீனாட்சி ஆட்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில், சுவாமி பிரியாவிடையுடன் நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளினர்.