சித்திரை திருவிழா: ஏப்.30ல் மீனாட்சி திருக்கல்யாணம் பார்க்க மதுரைக்கு வாங்க!
மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா செவ்வாய்கிழமை (ஏப்ரல் 21) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிரசித்தி பெற்ற மீனாட்சி திருக்கல்யாணம் 30ஆம் தேதியும், மே 1ல் தேரோட்டமும் நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தில் பங்கேற்பவர்களுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக வாஸ்து சாந்தி பூஜையும், அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 21ஆம் தேதி காலை 10.36 முதல் 12 மணிக்குள் கொடியேற்றமும் நடைபெற உள்ளன. இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்மன் விருட்சிக வாகனத்திலும் 4 மாசி வீதிகளில் உலா வருவார்கள். அன்று முதல் நாள்தோறும் அம்மன், சுவாமி, பிரியாவிடை ஒவ்வொரு வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
பட்டாபிஷேகம்
முக்கிய நிகழ்ச்சியாக ஏப். 28ஆம் தேதி இரவு 7.30 முதல் 8 மணி வரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது.
திருக்கல்யாணம்
ஏப்ரல் 29ஆம் தேதி திக்விஜயமும், ஏப்ரல் 30ஆம் தேதி காலை 9 முதல் 9.30 மணிக்குள் மீனாட்சி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.ஏப். 30ம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு தெற்கு, கிழக்கு மாசி வீதிகளில் பக்தர்கள் அமர்ந்து நிகழ்ச்சியை காண பந்தல் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
சிறப்பு ஏற்பாடுகள்
ஏப்.30ல் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்காக 240 டன் குளிர்சாதன பெட்டி திறந்தவெளியில் வைக்கப்படுகிறது. திருக்கல்யாணத்திற்கான காணிக்கை மற்றும் பொருளை கோயில் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.பிரசாதம் கொடுக்க விரும்புவோர், அது தொடர்பான விபரங்கள், இடம் குறித்து கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.
இணையதள முன்பதிவு வசதி
திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு கோபுரம் வழியாக, 6 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசன முறையில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வசதிக்காக கோவிலின் இணைய தளத்தில் (www.maduraimeenakshi.org) நாளை 21ஆம்தேதி முதல் 25-ந்தேதி வரை பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
டிக்கெட் முன்பதிவு வசதி
பக்தர்களின் வசதிக்காக மீனாட்சி அம்மன் கோவிலின் பிரதான டிக்கெட் விற்பனை நிலையத்திலும், தெப்பக்குளம் மீனாட்சி சுந்தரேசுவரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அடையாள சான்றுகள்
திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க ரூ.500 மற்றும் ரூ.200 கட்டண சீட்டு பெற விரும்பும் பக்தர்கள் கீழ்க்கண்ட 7 அடையாளசான்றிதழ்களில் ஏதாவது ஒரு சான்றிதழை தெரிவித்து முன்பதிவு செய்யலாம்.
பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், நடப்பு வங்கி சேமிப்பு கணக்கு, ஓட்டுநர் உரிமம், ரேசன் கார்டு, ஆதார் அட்டை போன்ற சான்றிதழ்கள் மற்றும் செல்போன் எண்ணுடன் ஈமெயில் முகவரி இருப்பின், தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஏப்ரல் 25 கடைசி தேதி
மேலும் இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோவில், மதுரை என்ற முகவரிக்கு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்ப படிவத்தினை அடையாளச்சான்றுகள் ஏதேனும் ஒன்றை இணைத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 25க்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
குலுக்கல் முறையில் இடம்
அனுமதிக்கப்பட்ட இடத்தை விட கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், விண்ணப்பித்துள்ள பக்தர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) செல்போன் எண்ணுக்கு 25ஆம்தேதிக்கு பிறகு அனுப்பப்படும்.
ஏப்.27ல் டிக்கெட்டுகள்
எஸ்.எம்.எஸ். கிடைக்கப்பெற்றவர்கள் ஆன்லைன் மூலமாகவும் தொகையை செலுத்தி அதனுடன் கிடைக்கும் கட்டணச்சீட்டை 27ஆம் தேதி முதல் கோவில் அலுவலகத்தில் கொடுத்து உரிய கட்டண சீட்டை பெற்றுக் கொள்ளலாம் அல்லது எஸ்.எம்.எஸ். கிடைக்கப்பெற்றவர்கள் 27ஆம்தேதி முதல் கோவில் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு கட்டணச்சீட்டு விற்பனை நிலையத்தில், கட்டணச் சீட்டிற்கான தொகையினை செலுத்தி கட்டணச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
தேரோட்டம்
மே 1ம் தேதி மீனாட்சி, சுவாமி, பிரியாவிடையின் தேரோட்டம் நடைபெறுகிறது. மாசி வீதிகளில் தேர் பவனி வரும். இதற்காக சிறிய மற்றும் பெரிய தேர்களை சீர் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
அழகர் ஆற்றில் இறங்குதல்
மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் அழகர் இறங்குதல் மே 4ஆம் தேதி நடக்கிறது. இதற்காக மே 2ல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.