ஜல்லிக்கட்டு... அனல் பறக்கிறது.. 'அவனி'யில் உண்ணாவிரதம்.. 'அலங்கை'யில் ஆர்ப்பாட்டம்!
மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு பரபரப்பு சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. ஜல்லிக்கட்டு நடைபெறும் முக்கிய இரு மையங்களான அலங்காநல்லூரும், அவனியாபுரமும் ஜல்லிக்கட்டுக் காளைகள் போல சீறிப் பாயக் காத்துள்ளன. போராட்டங்களும் அங்கு வெடித்துள்ளன. இந்த நிலையில் முடிவு தெரிந்து வருவதற்காக ஜல்லிக்கட்டுக் குழுவினர் இன்று டெல்லிக்கு விரைகிறார்கள்.
கடந்த வருடத்தைப் போல இல்லாமல் இந்த வருடம் எப்படியாவது ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தி விட வேண்டும் என்ற வேகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் உள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றனர். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும்.. அனுமதி வரும் வரும் வரும் என்று குணா கமல் போல திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். இதனால் பெரும் நம்பிக்கையில் மாடு பிடி வீரர்கள் காத்துள்ளனர்.
ஆனால் தற்போது அவசரச் சட்டம் பிறப்பிப்பது போலவும் தெரியவில்லை. அரசாணை வரும் அறிகுறியையும் காணோம். இதனால் மாடு பிடி வீரர்களும், இளைஞர்களும், ஜல்லிக்கட்டுக் குழுவினரும் கவலை அடைய ஆரம்பித்துள்ளனர்.
தினந்தோறும் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி அலங்காநல்லூரிலும், தென் மாவட்டங்களின் பல்வேறு ஊர்களிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன.
அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்
நேற்று அலங்காநல்லூரில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாடிவாசல் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.
அவனியாபுரத்தில் உண்ணாவிரதம்
அதேபோல மதுரை அவனியாபுரத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. முதலில் இதற்கு அனுமதி தரவில்லை காவல்துரை. மேலும் காளைகளுடன் வந்த மாடு பிடி வீரர்களையும், உரிமையாளர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தவும் போலீஸார் முயன்றனர். இதையடுத்து காளைகளை மட்டும் அப்புறப்படுத்திய பின்னர் உண்ணாவிரதம் தொடர்ந்தது.
பாலமேட்டில் உண்ணாவிரதம்
இதேபோல பாலமேட்டில் ஜனவரி 8ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மகாலிங்கசுவாமி மடத்துக் கமிட்டி அறிவித்துள்ளது.
300 வருடமாக
இதுகுறித்து மடத்து நிர்வா்கிகள் கூறுகையில், மதுரை மாவட்டம் பாலமேட்டில் 300 ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. கடந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாததால் பொங்கல் பண்டிகையின்போது கடையடைப்பு, உண்ணாவிரதம் மற்றும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி துக்க தினமாக கடைபிடித்தோம். இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். எனவே பொதுமக்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யுதுள்ளோம் என்றனர்.
கார்த்திக்கும் களம் இறங்குகிறார்
இந்த நடிகரும், நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக் தனது கட்சி சார்பில் 10ம் தேதி அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
டெல்லி விரையும் குழு
இந்த நிலையில் மத்திய அரசுத் தரப்பில் என்ன வேலை நடக்கிறது என்பதை அறிவதற்காக ஜல்லிக்கட்டுக் குழு டெல்லி செல்கிறது. தமிழக ஜல்லிக்கட்டு குழுவினர் 3 நாட்களுக்கு முன் டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்து, பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஆலோசனை நடக்கிறது. நீங்கள் நம்பிக்கையோடு ஊருக்குச் செல்லுங்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஜல்லிக்கட்டுக் குழுவினர் டெல்லி செல்கிறார்கள்.
பொன். ராதா கூட்டிச் செல்கிறார்
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் தலைமையில் குழுவினர் இன்று மாலை டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர். இவர்களை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அழைத்து செல்கிறார்.