கோர்ட் தடையை மீறி ஒட்டக குர்பானி.. நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மீது வழக்கு
மதுரை: உயர்நீதிமன்ற தடையை மீறி ஒட்டகத்தை வெட்டி குர்பானி கொடுத்ததாக நடிகர் வடிவேலுவின் உதவியாளரான ஆதம் பாவா உள்ளிட்ட 30 பேர் மீது மதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து 30 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
பக்ரீத் பண்டிகையன்று ஒட்டகம் குர்பானி கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை போட்டு விட்டது. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்தவரும், நடிகர் வடிவேலுவின் உதவியாளுமான ஆதம் பாவா என்பவர் ஒட்டகம் ஒன்றை வாங்கி குர்பானி கொடுப்பதற்காக மதுரை நெல்பேட்டையில் உள்ள சுங்கம் பள்ளிவாசலில் வைத்திருந்தார்.
ஆனால் கோர்ட் உத்தரவை சுட்டிக் காட்டிய போலீஸார், ஒட்டகத்தை குர்பானி கொடுக்கக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் தடையை மீறி வெட்டப் போவதாக ஆதம் பாவா கூறியிருந்தார். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அவருடன் ஆலோசனை நடத்தினர். அவரை சமாதானப்படுத்தினர். இதைத் தொடர்ந்து வேன் மூலம் ஒட்டகத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
ஆனால் போலீஸாரை ஏமாற்றி விட்டு நாகமலை புதுக்கோட்டை பகுதிக்கு அருகே வைத்து ஒட்டகத்தை வெட்டி குர்பானி கொடுத்து விட்டார்களாம். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் தற்போது ஆதம் பாவாவைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆதம் பாவா உள்ளிட்ட 30 பேர் மீது நாகமமலைப் புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து 30 பேரும் தலைமறைவாகி விட்டனராம்.