சசிகலா புஷ்பாவிடம் மதுரை போலீசார் கேட்ட 160 கேள்விகள்: கையெழுத்து போட மறுப்பு
சென்னை: முன்ஜாமின் கேட்டு, தாக்கல் செய்த மனுவில், போலி கையெழுத்திட்டதாக, சசிகலா புஷ்பா எம்.பி., மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், வெள்ளிகிழமையன்று அவர், மதுரை புதுார் போலீசார் முன் ஆஜராகி, போலீசார் கேட்ட 160 கேள்விகளுக்கு ஐந்தரை மணி நேரம் விளக்கம் அளித்தார். சசிகலா புஷ்பாவின் கையெழுத்துதானா என உறுதிசெய்வதற்காக, அவரிடம் கையெழுத்து போடுமாறு போலீசார் கூறினர். சசிகலாபுஷ்பா, 'நீதிமன்றம் உத்தரவிட்டால் கையெழுத்திட தயார்' எனக்கூறி கையெழுத்து போட மறுத்துவிட்டார்.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, ராஜ்யசபா, எம்.பி., சசிகலா புஷ்பா, கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா உள்ளிட்டோர் மீது, அவரது வீட்டில் பணிபுரிந்த பானுமதி, ஜான்சிராணி அளித்த புகாரின் படி, துாத்துக்குடி போலீசார், பாலியல் வழக்குப்பதிவு செய்தனர். இவ் வழக்கில், முன்ஜாமின் கேட்டு சசிகலா புஷ்பா தரப்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்த சசிகலா புஷ்பா, 'மதுரை வந்து, வழக்கறிஞர் முன், முன்ஜாமின் வக்காலத்து மனுவில் கையெழுத்திட்டேன்' என, தெரிவித்திருந்தார். இதில் சந்தேகம் இருப்பதாக, அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வக்காலத்தில் சசிகலா புஷ்பா போலி கையெழுத்திட்டதாகக் கூறி அவரது கணவர், மகன் ஆகியோர் மீது மதுரை கோ.புதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து பதிவாளர் அளித்த புகாரின் பேரில் மூவர் மீதும் புதூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், சசிகலா புஷ்பா தன்னை கைது செய்ய தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் சசிகலா புஷ்பாவை கைது செய்ய தடை விதித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு உத்தரவிட்டது.
160 கேள்விகள்
இதையடுத்து சசிகலா புஷ்பா, லிங்கேஸ்வர திலகன், பிரதீப் ஆகியோர் மதுரை கோ.புதூர் காவல் நிலையத்தில் நேற்று காலை 11.45 மணி அளவில் ஆஜராகினர். உடன் வழக்கறிஞர் சத்யராஜ், நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் வந்தனர். ஆய்வாளர் பாலசுந்தரம் 5 மணி நேரத்துக்கு மேலாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். சசிகலா புஷ்பாவிடம் 160 கேள்விகளும், கணவர், மகன் ஆகியோரிடம் தலா 140 கேள்விகளும் கேட்டு விசாரித்ததாக போலீசார் தெரிவித்தனர். விசாரணையை முன்னிட்டு கோ.புதூர் காவல் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கையெழுத்து போட மறுப்பு
மூவரும் அளித்த பதில்கள் உடனடியாக டைப் செய்யப்பட்டூ 'பிரின்ட் அவுட்' எடுத்து சசிகலா புஷ்பா உட்பட மூவரிடம் கையெழுத்து பெறப்பட்டது. அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து முன்ஜாமின் மனுவில் இடம்பெற்றது, சசிகலா புஷ்பாவின் கையெழுத்துதானா என உறுதிசெய்வதற்காக, அவரிடம் கையெழுத்து போடுமாறு போலீசார் கூறினர். சசிகலாபுஷ்பா, 'நீதிமன்றம் உத்தரவிட்டால் கையெழுத்திட தயார்' எனக்கூறி கையெழுத்து போட மறுத்துவிட்டார்.
முதல்வர் குறித்த செய்தி
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, முதல்வர் ஜெயலலிதா குறித்து 'கேபியஸ் கார்பஸ்' மனு போடுவேன் என்று நான் சொன்னது முதல், அவரது உடல்நலம் குறித்த தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அவர் குறித்த சிறு தகவல்கூட வெளியே வரவழைக்கும் அளவிற்கு, இறைவன் எனக்கு இந்த பதவியை கொடுத்ததற்கும், அதை நான் தக்க வைத்துக்கொண்டதற்கும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்லது நடக்கட்டும்
முதல்வர் மிக விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும். நான் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் வெளியேற்றப்பட்டதற்கு காரணம் சிலர்தான். பின்னால் இருந்து அவர்கள்தான் யாரையும் பார்க்கவிடாமல், கடிதங்களை கொடுக்க முடியாமல் செய்கிறார்கள் என்று ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன். முதல்வர் குணமடைந்து வந்த பிறகு, எல்லோர் பற்றியும் தெரிந்துக் கொண்டு எங்களுக்கு நியாயம் கிடைக்க வில்லை என்றாலும்கூட தொண்டர்களுக்காவது நல்லது நடக்கட்டும் என்று கூறினார் சசிகலா புஷ்பா.